தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்த யேசுராஜ் (36). ஓட்டலில் பணிபுரிந்து வரும் இவரது மனைவி நிவேதா. இந்தத் தம்பதிக்கு ராஜேஸ்வரி என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது.
கடந்த 18ஆம் தேதி இரவு நிவேதா தன் மகளுக்கு திருஷ்டிக்காக சூடம்(கற்பூரம்) சுற்றியுள்ளார்.. அப்போது, குழந்தை அழுது கொண்டிருந்ததால் கற்பூரம் வைக்கப்பட்டிருந்த டப்பாவை அவர் குழந்தைக்கு விளையாட கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
தாய் நிவேதா வீட்டின் முற்றத்தில் கற்பூரத்தை கொளுத்தி விட்டு வீட்டிற்குள் வருவதற்குள் குழந்தை டப்பாவைத் திறந்து அதிலிருந்த கற்பூர வில்லைகளை கையில் எடுத்து வாயில் போட்டு விழுங்கியுள்ளது.
இதில் அதிர்ச்சியடைந்தத் தாய் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் சிசிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை ராஜேஷ்வரி இன்று (ஜன.26) சிகிச்சை பலனின்றி இறந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.