தென்காசி: பாஞ்சான்குளத்தில் உள்ள தொடக்கப்பள்ளி இன்று திறக்கப்பட்ட நிலையில் 23 மாணவர்களில் ஏழு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை தந்தனர். பள்ளியில் பெஞ்ச் எதுவும் போடாமல் இருந்தது.
மேலும், இன்று பட்டியலின மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பள்ளியில் ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில், ஆதிதிராவிடப் பள்ளி குழந்தைகளுக்கு ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் தின்பண்டங்களை வழங்க முடியாது என்று கூறும் பெட்டிக்கடை உரிமையாளரின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீண்டாமை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். வீடியோ எடுத்து வெளியிட்ட கடைக்காரர் மகேஷ் என்பவர் தலைமறைவாகியதைத் தொடர்ந்து அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே பாஞ்சான்குளம் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா என்பவர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய அலுவலராக மாரியப்பன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டாகத்தியில் 20 பர்த்டே கேக் வெட்டிய 17 வயது சிறுவன் மீது வழக்கு