ETV Bharat / state

ஏற்க மறுத்த கணவன் : விரக்தியில் மனைவி தற்கொலை

author img

By

Published : Aug 10, 2023, 9:19 AM IST

Etv Bharat
Etv Bharat

பாவூர்சத்திரம் அருகே காவல்துறையில் பணிபுரியும் கணவரின் வீட்டின் முன்பு மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மனமுடைந்து நேற்று காலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமம், வ.உ.சி நகரைச் சேர்ந்த சின்னத்துரை மகள் குமுதா (23). ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சுதர்சன் (29) ஆகிய இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. தற்பொழுது சுதர்சன் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் குடும்பம் நடத்திவிட்டு, சென்னைக்கு சென்று வீடு பார்த்துவிட்டு பின்பு, அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவின் தாய் வீட்டில் சுதர்சன் விட்டு சென்றுள்ளார். மேலும், இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். தீடீரென சுதர்சன், தனது மனைவியை நிராகரித்துள்ளார். அப்போது விசாரிக்கையில், தனக்கு வேறு ஒரு பெண்ணை பிடித்திருப்பதாகவும், தான் அந்த பெண்ணை விரும்புவதாகவும், தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் ஆனால் அது பெரிதாக பலனில்லை. மேலும், தொலைபேசியில் குமுதா அழைக்கும் பொழுதெல்லாம் தகாத வார்த்தைகளால் சுதர்சன் திட்டியதாகவும், வேதனையடைந்துள்ளார்.

இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சுதர்சன் வந்திருப்பதை அறிந்த குமுதா அங்கு சென்று அவரது வீட்டு வாசலில் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தால் ராயப்பநாடானூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், குமுதா தர்ணாவில் இருந்ததை அறிந்து கொண்ட சுதர்சன் வீட்டிற்கு வராமலே இருந்துள்ளார். இதனையடுத்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலையச் செய்தனர்.

பின்னர், குமுதா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலையில் சுதர்சன் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து குமுதாவை அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குமுதா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மேலும், இத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், குமுதா மீது ஏற்கனவே சுதர்சன் போலீசில் புகார் அளித்திருந்ததாகவும், அதில் குமுதாவிற்கு மனநிலை சரியில்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், குமுதா உறவினர்களும் சுதர்சன் மீது ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். பல கட்டமாக விசாரணையில் பேச்சு வார்த்தைகள் நடத்தியும் உடன்படாததால் தர்ணாவில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பரீட்சையில் ஃபெயில் ஆன மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: வீடியோ வெளியானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.