ETV Bharat / state

Keeladi Excavation: சுடுமண் பாம்பு உருவம் - கீழடியில் அடுத்த ஆச்சரியம்!

author img

By

Published : Aug 9, 2023, 8:32 AM IST

Updated : Aug 9, 2023, 8:59 AM IST

சுடுமண் பாம்பு உருவம்
சுடுமண் பாம்பு உருவம்

படிகத்தாலான எடைக்கல் முதன் முதலில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி ஒன்று அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த உருவம் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் இந்தியத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 4-ஆம் கட்ட அகழாய்விலிருந்து தற்போது நடைபெற்று வரும் 9-ஆம் கட்ட அகழாய்வு வரை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை பல்லாயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. உறைக்கிணறுகள், பாசிமணிகள், கருப்பு சிவப்பு பானையோடுகள், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், சுதை பொருட்கள் மேலும் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் மனித எலும்புக்கூடுகள் என பல்வேறு பழமையான சின்னங்கள் கிடைக்கப்பட்டு வருகின்றன.

கருங்கல்லால் ஆன பல்வேறு வகையான அளவுகள் கொண்ட எடைக்கற்கள் கீழடியில் கிடைத்து வரும் நிலையில், அண்மையில் படிகத்தால் ஆன கிறிஸ்டல் குவார்ட்ஸ் எடைக்கல் ஒன்று 8 கிராம் அளவில் கண்டெடுக்கப்பட்டது. எடைக்கல் ஒன்று கிறிஸ்டல் குவார்ட்ஸ் வகையில் கிடைத்துள்ளது இதுவே முதன்முறை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுக் குழி ஒன்றில் 190 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பானையோடுகளை வகைப்படுத்தும் பொழுது, சற்றே உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டது. கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பின் கண்களும், வாய் பகுதியும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்றுக் காணப்படுகிறது. இவ்வுருவம் 8.5 செ.மீ. நீளமும் 5.4 செ.மீ. அகலமும் 1.5 செ.மீ. தடிமனும் கொண்டுள்ளது. இச்சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன எனத் தமிழக தொல்லியல் துறையின் இயக்குநர் சிவானந்தம் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பல்வேறு வகையான மனித உருவங்கள் பொறிக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களும், விலங்குகளின் உருவங்களும் கிடைத்துள்ள நிலையில், முதன் முறையாகப் பாம்பு தலை கொண்ட சுடுமண் சிற்பம் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் மிக நேர்த்தியாக கைகளால் உருவாக்கப்பட்ட இச்சிற்பம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்வியலை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

படிகத்தாலான கிறிஸ்டல் குவார்ட்ஸ் எடைக்கல்லை அடுத்து, தற்போது சுடுமண்ணால் ஆன பாம்பு தலை கிடைத்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் கீழடி அகழாய்வுகளில் கவனத்தை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் படிகத்தால் ஆன எடைக்கல் கண்டெடுப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வியப்பு!

Last Updated :Aug 9, 2023, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.