கீழடி அகழாய்வு; முதன்முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் கண்டெடுப்பு

author img

By

Published : Sep 16, 2022, 7:53 PM IST

கீழடி அகழாய்வு ; முதன் முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் முதன்முறையாக முதுமக்கள் தாழிக்குள் நெல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை: கீழடி அகழாய்வில் இதுவரை 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்று 8ஆம் கட்ட அகழாய்வானது நடைபெற்று வரும்நிலையில் முதன்முறையாக கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியின் உள்ளே நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளில் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியினுள் முதல்முறையாக நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதில் கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்கக்கூடும் எனக் கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தற்போது 8ஆம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் முழுமையாக சேதமடையாமல் ஒரு சில தாழிகள் மட்டுமே உள்ளன.

அவற்றில் உள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை செய்ய தமிழ்நாடு தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் முழுமையான தாழி திறக்கப்பட்டு, அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. நேற்று இரவு(செப்.15) இரண்டாவது முழுமையான தாழி திறக்கப்பட்டது.

தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையாளர் (பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய்குமார், காவ்யா உள்ளிட்ட குழுவினர் நான்கரை அடி உயரமுள்ள தாழியை திறந்து, அதில் உள்ள பொருட்களை ஆய்விற்காக வெளியில் எடுத்தனர். தாழியினுள் சிதிலமடைந்த மண்டை ஓடும், கை கால் எலும்புகளும் கிடைத்துள்ளன. கொந்தகை தளத்தில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

கீழடி அகழாய்வு; கொந்தகை தளத்தில் முதன்முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் கண்டெடுப்பு

8ஆம் கட்ட அகழாய்வில் மட்டும் 57 தாழிகள் கண்டறியப்பட்ட நிலையில் அதில் 18 தாழிகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. நேற்று(செப்.15) இரவு 8 மணிக்கு 123ஆவது தாழி திறக்கப்பட்டது. இதுவரை தாழிகளினுள் மண்டை ஓடு, சுடுமண் பானைகள், இரும்பு ஆயுதம் உள்ளிட்டவைகள் மட்டும் கண்டறியப்பட்டன.

முதன்முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் மணிகள் கண்டறியப்பட்டுள்ளன. இறுகிப்போன நிலையில் கிடைத்துள்ள இந்த நெல்மணிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அதேபோல முதன்முறையாக தாழிகளினுள் சுடுமண் பாத்திரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் துறையினர் தெரிவிக்கையில், ''தாழிகள் 2600ஆண்டுகளுக்கு முன் ஒரு அந்தஸ்தாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். தாழிகளினுள் உள்ள பொருட்களை வைத்து இறந்தவர்களின் மதிப்பையும் அறிய முடிகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தாழியினுள் 6 சுடுமண் பாத்திரங்கள் உட்பட 19 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதிகளவு பாத்திரங்கள் இருப்பதாலும் நெல்மணிகள் இருப்பதாலும் இவர் செல்வந்தராகவோ மதிப்புமிக்கவராகவோ இருந்திருக்கக்கூடும். மேலும் முகத்தில் கீழ்தாடை பற்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 16 பற்கள் உள்ளன. பற்கள் அனைத்தும் வலுவானதாக இருந்திருக்கும்.

தாழியினுள் புதைக்கப்பட்டவர்கள் நல்ல திடகாத்திரமான வலுவான உடலமைப்பைக் கொண்டவராக இருந்திருக்கலாம்'' என்றும் தெரிவித்தனர்.

இம்மாதத்துடன் பணிகள் நிறைவு பெற உள்ளதையடுத்து தாழிகள் அனைத்தையும் திறந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறை திட்டமிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்துக்களை இழிவாகப்பேசியதாக ஆ. ராசாவின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.