சிவகங்கை: சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைபட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவுத் திட்டமான பெரியார் சமத்துவபுரம் திட்டம் கடந்த திமுக ஆட்சியின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. தேர்தல் வந்ததைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. அதற்கு அடுத்தபடியாக தொடர்ந்து இரு முறை ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கடந்த பத்தாண்டுகளாக வீடுகளைப் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்த இந்த வீடுகள் மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பழுது நீக்கப்பட்டு புத்தம் புதிய வீடுகளாக பயனாளிகளுக்கு வழங்கும் முகமாக வீட்டின் அனைத்து வசதிகளும் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு வருகிறது.
102 வீடுகள் அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, சமுதாயக்கூடம், நூலகம், விளையாட்டு மைதானம், உயர்நிலை தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அனைத்து பல்வேறு அம்சங்களுடன் கூடிய கோட்டைவேங்கைபட்டி பெரியார் சமத்துவபுரத்தை நேற்று (மே.17) ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், "2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெரியார் பெயரில் அமைக்கப்பட்டிருந்த சமத்துவபுரங்கள் தேர்தல் அறிவிப்பு வந்த காரணத்தால் அவைகள் பயனாளிகளுக்கு வழங்குவது தள்ளிப் போய்விட்டது.
அதிமுகவைப் பொறுத்தவரையில் இந்த திட்டத்தைத் தொடர்வதற்கு அவர்களுக்கு மனமில்லை என்றாலும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளைக் கண்டறிந்து வழங்குவதற்குக் கூட மனம் இல்லாமல் இந்த திட்டத்தை முடக்கி வைத்திருந்தார்கள். இந்த திட்டத்தைத் தொடக்கி வைப்பதற்கு மனமில்லை என்றாலும் இதை பயனாளிகளுக்கு வழங்கி இருக்கலாம். அதை கூட செய்யாமல் முழுமையாக முடக்கி வைத்து இருந்தார்கள் என்று கூறினார்.
ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பெரியார் பெயரில் அமைந்திருக்கக் கூடிய இந்த சமத்துவபுரத்தைப் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். அதன் அடிப்படையில் இந்த ஆண்டில் ஏறத்தாழ 180 சமத்துவபுரங்களை மறு சீரமைக்க பெரும் தொகையையும் கொடுத்துள்ளார்கள்.
திருவள்ளுவர், விழுப்புரம், கடலூர், திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 5 சமத்துவபுரங்கள் புனரமைத்து மீண்டும் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
விழுப்புரத்தில் கடந்த மாதத்தில் சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது மக்களிடத்தில் மகத்தான வரவேற்பு பெற்றது. மீதமுள்ள நான்கு சமத்துவபுரங்கள் சீர்திருத்த பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.