அகழ் வைப்பகம் கட்டுமானப் பணிகள்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

author img

By

Published : Mar 25, 2022, 7:53 PM IST

அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி
அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி ()

அகழ் வைப்பகம் கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

சிவகங்கை: கீழடியில் ஏழு கட்ட அகழாய்வுப் பணிகளும் அதைச் சுற்றியுள்ள அகரம், கொந்தகை‌, மணலூர் ஆகியப் பகுதிகளில் இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் கி.மு. 2,600 ஆண்டுகளுக்கும் பழமையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழடி மக்கள் வாழ்ந்த பகுதியாகவும், கொந்தகை இடுகாட்டுப் பகுதியாகவும், அகரம் விவசாயம் சார்ந்த பகுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கியது. அங்கு மூன்று குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருள்களை காட்சிப்படுத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி கொந்தகை கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.03 கோடி செலவில் அகழ் வைப்பகம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

இதில் மொத்தம் 6 தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் நிர்வாக கட்டடம், இரண்டாம் தளத்தில் கல் தொல்பொருள்கள் காட்சிக்கூடம், மூன்றாம் தளத்தில் உலோக தளப்பொருள்கள் காட்சிக்கூடம், நான்காம் தளத்தில் மணிகள் மற்றும் தொல்பொருள்கள் காட்சிக்கூடம், ஐந்தாம் தளத்தில் விலங்கு குறித்த தொல்பொருள்கள் காட்சிக்கூடம்‌, ஆறாம் தளத்தில் சுடுமண் பானைகள் தொல்பொருள்கள் காட்சிக்கூடம் ஆகியன அமையவுள்ளன.

இப்பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் கொந்தகை கிராமத்தில் அகழ் வைப்பகம் கட்டுமானப் பணிகள், கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், வருவாய்த்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தொண்டி அருகே சங்ககால ஊர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.