ETV Bharat / state

சிவகங்கையில் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில் அதிமுக குலுக்கல் முறையில் தேர்வு!

author img

By

Published : Dec 11, 2020, 2:02 PM IST

சிவகங்கை
சிவகங்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 4 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 5ஆவது முறையாக இன்று (டிச. 11) நடைபெற்ற தேர்தலில் குலுக்கல் முறையில் அதிமுக வெற்றிபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அதிமுக, திமுக கூட்டணி தலா 8 இடங்கள் என சம பலத்தில் இருந்ததால், ஜனவரி 11, 30 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். இந்நிலையில் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் கரோனாவால் 6 மாதங்களாகத் தேர்தல் நடக்கவில்லை. திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து டிச. 04ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் சிவகங்கையில் நடந்ததால், தொடர்ந்து 4ஆவது முறையாக டிசம்பர் 11ஆம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச. 11) பரபரப்பான சூழலில் காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடைபெற்றது.

சிவகங்கையில் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில் அதிமுக குலுக்கல் முறையில் தேர்வு
திமுக சார்பில் 7ஆவது வார்டு உறுப்பினர் செந்தில் குமாரும், அதிமுக சார்பில் 1ஆவது வார்டு உறுப்பினர் பொன்மணி பாஸ்கரன் ஆகிய இருவரும் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பின்னர் வாக்குப்பதிவு நடந்து முடிந்து எண்ணிக்கையில் திமுக, அதிமுக 8 என்ற சம பலத்தில் வாக்கு பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் தேர்வுசெய்ததில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கரன் வெற்றிபெற்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.