சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதனை சரி செய்திட நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றார்.
அதன்படி, சேலம் மாநகரம் 44ஆவது கோட்டம் களரம்பட்டி பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அவர் ஆய்வு மேற்கொண்டபோது, களரம்பட்டி பிரதான சாலையானது கடந்த இருபது ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து இந்த சாலையை புதுப்பிக்க சேலம் மாநகராட்சி அலுவலர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பல முறை எடுத்துரைத்தும், வலியுறுத்தியும், இந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில், இருபது ஆண்டுகளுக்கு பிறகு சாலை புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் புதியதாக அமைக்கப்படும் தார் சாலை பணிகளை நேரில் பார்வையிட வந்த அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, தார்சாலை அமைத்திட நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து தங்கள் பகுதியில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளை பொதுமக்கள் கூறியதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ’மாநகரம் முழுவதும் பல்வேறு திட்ட பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பணியையும் போராடியே பெற வேண்டிய சூழல் நிலவிவருகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: விண்வெளி குப்பைகளைச் சேகரிக்கும் தொழில்நுட்பம் - இஸ்ரோவுக்கு பள்ளி மாணவர்கள் புது ஐடியா