ETV Bharat / state

சேலத்தில் முதலமைச்சர் வருகை: பூ மார்க்கெட் கடைகளை இடித்துத் தள்ளிய அதிகாரிகள்!

author img

By

Published : Jun 5, 2023, 6:01 PM IST

சேலத்தில் முதலமைச்சரின் வருகைக்காக 200க்கும் மேற்பட்ட பூக்கடைகளை 48 மணி நேரத்தில் காலி செய்யக் கோரி மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

salem
சேலத்தில் முதலமைச்சர் வருகை

சேலத்தில் முதலமைச்சர் வருகை: பூ மார்க்கெட் கடைகளை இடித்துத் தள்ளிய அதிகாரிகள்!

சேலம்: பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் பூ , பழம், வாழை இலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் 200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் வருகின்ற 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிறார்.

அதாவது, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையம், அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை ஆகியவற்றை திறப்பதற்காக ஸ்டாலின் வருகை புரிகிறார். மேலும், மே 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன வசதிக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி பூ மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி, இன்று காலை முதலே மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனங்களைக் கொண்டு கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், "கரோனா காலத்தில் புதிய பூ மார்க்கெட் கட்டும் காரணத்தால், அந்த இடத்தை காலி செய்து தற்போது இப்பகுதியில் வியாபாரம் நடத்தி வருகின்றோம். தற்போது இது தற்காலிக மார்க்கெட் தான், புதிய மார்கெட் பணிகள் இன்னும் 10 சதவீதம் தான் பாக்கியுள்ளது. அது முடிந்தவுடன் நாங்களே காலி செய்ய தயாராக உள்ளோம்.

ஆனால் தற்போது எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு இடத்திற்கு செல்லுமாறு கூறுகின்றனர். அந்த இடத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை, ஒரு பாத்ரூம் வசதி கூட இல்லை. அப்படிப்பட்ட சூழலில், தற்போது ஒட்டு மொத்தமாக இத்தனை வியாபாரிகளையும் காலி செய்ய சொன்னால் நாங்கள் என்ன செய்வோம். பாதுகாப்பே இல்லாத இடத்திற்கு 2 நாட்களில் காலி செய்ய சொல்கின்றனர்.

இதற்கு காரணம், முதலமைச்சர் வருகைக்காக எங்களின் கடையை அப்புறப்படுத்துவது வேதனை அளிக்கிறது. மாற்று இடத்தில் இதுவரை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், அந்த பகுதியில் கடைகள் அமைத்தால் எங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது. எனவே முழுமையாக அந்த இடத்தில் பணிகள் நிறைவடைந்த உடன் கடைகளை நாங்கள் மாற்றிக் கொள்கிறோம்.

வேண்டுமென்றால் முதலமைச்சர் வருகைக்காக 2 தினங்கள் அனைத்து கடைகளை விடுமுறை கூட விட்டு விடுகிறோம். ஆனால் உடனடியாக கடைகளை காலி செய்ய முடியாது என்று கூறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக அப்புறப்படுத்துவது வேதனை இருப்பதாக கூறி பூ வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். பூ மார்க்கெட் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதால் சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: போர்கால அடிப்படையில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.