ETV Bharat / state

பணியிலும் பாதுகாப்பு இல்லை.. ஊதியமும் இல்லை.. வாழ்வற்றவர்களாக மாறும் தூய்மைப் பணியாளர்கள்..

author img

By

Published : Jul 22, 2023, 11:21 PM IST

Updated : Jul 23, 2023, 8:13 AM IST

வாழ்வற்றவர்களாக மாறும் தூய்மைப் பணியாளர்கள்..
வாழ்வற்றவர்களாக மாறும் தூய்மைப் பணியாளர்கள்..

பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களில் தூய்மைப் பணிகள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்கள் பணி பாதுகாப்பு இன்றி, உரிய ஊதியமும் இன்றி ஒதுக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அனைவராலும் ஒதுக்கப்படும் பணியை மேற்கொள்ளும் இவர்கள் வாழ்விலும் ஒதுக்கப்பட்டவர்களாக மாறுகிறோம் என கண்ணீர் வடிக்கின்றனர்.

சேலம்: "என் முன்னே நின்று பேசக் கூடாது", "அலுவலகத்தினுள் வரக் கூடாது", "வாசலில் நின்று எனக்கு வணக்கம் வைக்க வேண்டும்" இதெல்லாம் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் ஒருவர் தூய்மைப் பணியாளரை நோக்கி உதிர்த்த வார்த்தைகள்.

தொடவூர் பேரூராட்சியில் 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர், ஆறு மாதங்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பேரூராட்சித் தலைவருக்கு பணி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை. ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

இதனை கேட்கப் போன இடத்தில்தான், ஒருமையில் பேசி வாசலிலேயே விரட்டுகின்றனர் என கண்ணீருடன் கூறுகிறார் அந்த பெண்மணி. கல்லூரியில் படிக்கும் மகன்கள் உள்ளனர், என் வருமானம் மட்டுமே எங்களின் குடும்ப வாழ்வாதாரமாக உள்ளது, குப்பை அள்ளி ஊரை சுத்தம் செய்யும் வேலையைத் தவிர வேறு எந்த ஒரு வேலையும் எனக்குத் தெரியாது. என்னை வேலையை விட்டு போகச் சொன்னால் எங்கே செல்வேன் என கண்ணீருடன் கேட்கிறார், இவர்.

கடந்த மாதம் இதே சேலத்தைச் சேர்ந்த பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் மகனின் கல்விச் செலவுக்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த நிகழ்வை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். கடைநிலை பணியை, ஊதிய முரண்பாடுகளுடன் பார்த்து வரும் இவர்களின் வாழ்க்கை இன்னும் வெளியே சொல்லப்படாத துயர்களை சுமந்து கொண்டு உள்ளது.

திமுக பேரூராட்சித் தலைவர் வேலு
திமுக பேரூராட்சித் தலைவர் வேலு

பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக கணக்கிடப்பட்டு ரூ.346 வீதம் மாதம் ரூ.10,400 ஊதியமாக வழங்கப்படுகிறது . இதுவே இவர்கள் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாக இருந்தால் ரூ.22,000 முதல் ரூ. 40,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நிரந்தர பணி என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது என கூறுகின்றனர்.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை தெடாவூரில் மட்டுமல்ல கன்னங்குறிச்சி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, இளம்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளிலும் இதே நிலை நீடிப்பதாக, சேலம் டிஸ்ட்ரிக்ட் கார்ப்பரேஷன் & முனிசிபல் ஒர்க்கர்ஸ் யூனியனின் மாவட்ட பொதுச் செயலாளர் பெரியசாமி அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு தீண்டாமை: மேலும் நம்மிடையே பேசிய பெரியசாமி கூறுகையில், "பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, தெடாவூர் பேரூராட்சியின் தலைவர் வேலு மாற்று சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளார்.

'என் அலுவலகத்திற்குள் உள்ளே வராதே... வெளியே நின்று பேசு. என் வாசலில் நின்று எனக்கு வணக்கம் வை' என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தி அந்த பெண்ணை அவமானப்படுத்தி இருக்கிறார். அதேபோல என்னை மதிக்காத யாராக இருந்தாலும் வேலையை விட்டு போய் விடணும் என்று அராஜகத்துடன் பேரூராட்சி தலைவர் வேலு செயல்பட்டு வருகிறார்.

பணி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரூராட்சித் தலைவருக்கு இல்லை, அதிலும் ஒப்பந்தப் பணியாளரை அவர் பணி நீக்கம் செய்யவே முடியாது, சட்டத்திலும் அதற்கு இடமில்லை. பேரூராட்சியின் செயல் அலுவலர் (EO) மட்டும்தான் அதை செய்ய முடியும். இது குறித்து தெடாவூர் பேரூராட்சி E.O-விடம் கேட்டதற்கு, "எனக்கு எதுவும் தெரியாது! எல்லாம் தலைவர் தான், எங்கு வேண்டும் என்றாலும் போய் புகார் செய்து கொள்ளுங்கள்" என்று கூறி நழுவி கொண்டார்.

பணி நீக்கம் செய்து அராஜகம்: அதைக்காட்டிலும் கொடுமை என்னவென்றால், இந்த அராஜக பணி நீக்கம் செய்தது குறித்து சேலம் மாவட்ட பேரூராட்சிகளின் இணை இயக்குநரிடம் கேட்டபோது, "தெடாவூர் பேரூராட்சி தலைவர் ஒப்பந்தப் பணியாளரை பணி நீக்கம் செய்திருக்கிறார், தூய்மைப் பணியை செய்யக்கூடாது என்று கட்டளை இடுகிறார்" என்று எங்களது சங்கத்தின் சார்பில் முறையிட்டேன். அதற்கு அவர் மாவட்டத்தில் உள்ள எந்த பேரூராட்சி தலைவரும் நான் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை, அவர்கள் கூறினால் அதைக் கேட்டுக் கொண்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேலையை விட்டு விடும் நிலைமைதான் உள்ளது என்று பதில் கூறினார்.

சேலம் டிஸ்ட்ரிக்ட் கார்ப்பரேஷன் & முனிசிபல் ஒர்க்கர்ஸ் யூனியனின் மாவட்ட பொதுச்செயலாளர் பெரியசாமி
சேலம் டிஸ்ட்ரிக்ட் கார்ப்பரேஷன் & முனிசிபல் ஒர்க்கர்ஸ் யூனியனின் மாவட்ட பொதுச்செயலாளர் பெரியசாமி

இந்த அராஜக போக்குகளை கண்டித்து மிக விரைவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனைத்து பாதிக்கப்பட்ட பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார் தீர்க்கமாக. மேலும் பேசிய பெரியசாமி, "பேரூராட்சிகளின் செயல்பாடுகள் மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளன. சாலைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை எடைக்கு போட்டுவிட்டு, அந்தந்த பேரூராட்சி E.O-க்களுக்கு, கிலோவுக்கு ஒரு ரூபாய் கமிஷன் தர வேண்டும் என்று ஒவ்வொரு தூய்மைப் பணியாளரும் வற்புறுத்தப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலையும் கூறினார்.

நிர்ப்பந்தத்தில் பெண் தூய்மைப் பணியாளர்கள்: குப்பை வாகன ஓட்டுநர்கள் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் வாகனத்தை இயக்காமல் ஒப்பந்தப் பெண் தூய்மைப் பணியாளர்களை பேரூராட்சி முழுவதும் குப்பைகளை தள்ளு வண்டியில் சேகரித்துக் கொண்டு வந்து குப்பைக் கிடங்குகளில் கொட்டுமாறு நிர்ப்பந்திக்கிறார்கள். அதேபோல், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதும் இல்லை.

இதனால் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர், பலர் இறந்தும் போய் விடுகிறார்கள். குளோரின் வாங்குவது தொடங்கி தூய்மைப் பணியாளரின் பிஎப் (PF) பிடித்தம் செய்யப்படுவது வரை ஊழல் முறைகேடுகள் அதிகரித்து விட்டன. இப்படியே சென்றால் சுத்தம், சுகாதாரம் என்பதெல்லாம் பேரூராட்சிகளில் வெற்றுப் பேச்சாக போய்விடும்" என்று கவலையுடன் தெரிவித்தார், பெரியசாமி.

சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், ஜலகண்டாபுரம், கன்னங்குறிச்சி, ஆட்டையாம்பட்டி, கொங்கணாபுரம், மேச்சேரி, ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், தம்மம்பட்டி, தாரமங்கலம், வாழப்பாடி, வீரக்கல்புதூர், இளம்பிள்ளை, கெங்கவல்லி, காடையாம்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி, செந்தாரப்பட்டி, தெடாவூர், தேவூர், பூலாம்பட்டி உள்பட 31 பேரூராட்சிகள் உள்ளன.

இவற்றில் சுமார் 700க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி பேரூராட்சியான தெடாவூர் பேரூராட்சியில் 20க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் சொல்லொணா துயரங்களை விரைந்து மாவட்ட நிர்வாகம் களைந்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பதாகவும் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் பதிலையும் வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.

இதையும் படிங்க: மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அரங்கேறிய கொடூரம்!

Last Updated :Jul 23, 2023, 8:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.