ETV Bharat / state

காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 2:46 PM IST

Vice-Chancellor Jaganathan signed the police station!
துணை வேந்தர் ஜெகநாதன் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்!

Salem Periyar University VC: முறைகேடு வழக்கில் கைதான பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இன்று (டிச.27) கையொப்பமிட்டார்.

சேலம்: வருவாய் ஈட்டும் வகையில் கல்வி அறக்கட்டளை துவங்கியதற்காக கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், நேற்று (டிச.26) இரவு சேலம் குற்றவியல் நடுவர் இரண்டாவது அமர்வு நீதிபதி தினேஷ் குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, போலீசார் மற்றும் துணைவேந்தர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு 7 நாட்கள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, ஜெகநாதன் சேலம் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில், இன்று (டிச.27) நேரில் ஆஜராகி கையெழுத்திட்டுச் சென்றார். அப்போது காவல்துறையின் அனுமதியின்றி வெளியூருக்கு செல்லக்கூடாது என்றும், இந்த வழக்கு தொடர்பாக எந்த நேரத்தில் அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர்.

பின்னணி என்ன? சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அந்த புகாரில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், இணைப் பேராசிரியர் சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய நான்கு பேர் சேர்ந்து, பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.

இது தவிர, தங்கவேல் உள்பட 3 பேர் இணைந்து 'அப்டெக்கான் போரம்' என்ற மற்றொரு அமைப்பையும் தொடங்கி உள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்படும். இவர்கள் மூன்று பேரும் பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-இன் படி பொது ஊழியர்களாக கருதப்படுகிறார்கள்.

அதன்படி, அவர்கள் புதிதாக எந்த தொழிலையும் தொடங்க முடியாது. தனியார் நிறுவனம் தொடங்குவதாக இருந்தாலோ அல்லது அதில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ, அதற்கு பல்கலைக்கழக அனுமதியும், தமிழக அரசின் அனுமதியும் பெற வேண்டும்.

இந்நிலையில், விதிகளை மீறி தனியார் நிறுவனம் தொடங்கிய துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே 12 வகையான முறைகேடுகள் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த, கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு உயர்நிலை குழுவை அமைத்தது. அதன் பெயரில், உயர்நிலைக் குழுவினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து நேற்று (டிச.26) மாலை 4 மணி அளவில் துணைவேந்தர் ஜெகநாதன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு, வேனில் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே பதிவாளர் தங்கவேல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது, அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுண்டர்..! காஞ்சிபுரத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.