சேலத்தில் தியேட்டரில் காலாவதியான உணவுகள் விற்பனை; அதிகாரிகள் அதிரடி ஆக்‌ஷன்!

author img

By

Published : May 25, 2023, 10:05 AM IST

காலாவதியான உணவுகளை விற்பனை செய்த தியேட்டரில், உணவு பாதுகாப்புத் துறையின் திடீர் சோதனை

சேலம், தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான கேக், பாப் கார்ன், சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம்: தனியார் மல்டி பிளக்ஸ் திரையரங்கமான ஏ.ஆர்.ஆர்.எஸ் திரையரங்கில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான 96 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ சிப்ஸ், 16 கிலோ கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காலாவதி ஆன உணவுப் பொருட்களை விற்பனை செய்த தியேட்டர் நிர்வாகம் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் மல்டிபிளக்ஸ் திரை அரங்கு செயல்பட்டு வருகிறது. இதில் நேற்று முன் தினம், இரவு சினிமா பார்க்க வந்த சேலம் லீ பஜார் பகுதியில் சேர்ந்த தமிழரசன் என்பவர் திரை அரங்கிற்குச் சென்று உள்ளார். அப்பொழுது இடைவெளியின் போது அவர் குடும்பத்தாருக்குத் திரை அரங்கில் விற்பனை செய்யப்பட்ட சிப்ஸ் பாக்கெட் வாங்கி உள்ளார்.

அந்த சிப்ஸ் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட தேதி காலாவதியான நிலையில் அந்த பாக்கெட்டை பிரித்த பொழுது அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனை செய்யும் கடைகள், பார்கள் மீது நடவடிக்கை கோரி மனு!

அப்பொழுது விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த காலாவதியான 96 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ கேக், 7 கிலோ பாப் கார்ன், 16 கிலோ சிப்ஸ், 7 கிலோ ஸ்பிரிங் ரோல் என அனைத்து உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்து உள்ளனர். பின் குப்பையில் கொட்டி அழித்தனர். அதனைத் தொடர்ந்து மல்டி பிளக்ஸ் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது உணவு பாதுகாப்பு சட்டம் 2006 இன் பிரிவின் கீழ் 52, 56, 58 இன் படி வழக்கு தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரை அரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அதனை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உணவு பாதுகாப்புத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சியில் நிறைந்து உள்ளனர்.

இதையும் படிங்க: கிளப்கள், ஹோட்டல்களில் நேரத்தைத் தாண்டி மது விற்பனை; நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.