ETV Bharat / state

'இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகளை செய்தது அதிமுகவே' - ஈபிஎஸ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 7:49 PM IST

Edappadi K Palaniswami accuses MK Stalin Government
எடப்பாடி பழனிசாமி

Edappadi K Palaniswami: சேலத்தில் 700 இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் விழாவில் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி, சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக தன் மீது பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதாக திமுக மீது குற்றம்சாட்டினார்.

இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் விழா

சேலம்: சேலத்தில் தனியார் திருமண மண்டபத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், இஸ்லாமிய மக்கள் 700 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (நவ.30) நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களை வரவேற்று பேசினார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், "அதிமுக எப்போதும் சிறுபான்மை மக்களின் காவலனாக இருக்கும். ஹஜ் யாத்திரை (Haj Yatra) செல்ல அதிமுக ஆட்சியில்தான் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி வழங்க அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது. சந்தனக்கூடு நிகழ்ச்சிகளுக்கு அரசு செலவிலேயே சந்தனக் கட்டைகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்தியது. அதை மக்கள் இன்று உணர்ந்துவிட்டனர். சிறுபான்மை மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தனது குடும்பத்தின் மீதுதான் அதிக அக்கறை உள்ளது. அதனால்தான், மக்கள் படும்பாடு அவருக்கு தெரியவில்லை. திமுக கட்சியாக செயல்படவில்லை. அது நிறுவனமாக, ஒரு குடும்பக் கட்சியாக திகழ்கிறது. அதனால்தான், மக்களுக்கு நல்லது கிடைப்பது அரிதாக உள்ளது.

  • திமுக கட்சியில், ஸ்டாலின் குடும்பத்தை தவிர்த்து உழைக்கின்றவர்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சராகலாம்.. என்று சொல்வாரா?? pic.twitter.com/Cl3WlNnq5n

    — AIADMK IT WING (@AIADMKITWINGOFL) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறகு இன்பநிதி என்று மன்னர் பரம்பரையை போல 'முதலமைச்சர்' பதவிக்காக திமுக கம்பெனி செயல்பட்டு வருகிறது. அதிமுக அப்படியல்ல; வாரிசு அரசியல் இங்கு கிடையாது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக தொண்டர்கள் அனைவரையும் தங்களது வாரிசாக நினைத்து நல்லாட்சி தந்தார். திமுகவினர் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொள்ளை அடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர்.

இன்று கட்சியில் சேர்ந்துள்ள இஸ்லாமிய மக்கள் எப்போதும் என்னை நேரில் வந்து சந்திக்கலாம். நான் சேலத்தில் வசிப்பவன். உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மற்றும் சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இந்தோ - ஸ்ரீலங்கா சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி வீரர்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.