சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரிய கல்வராயன் மலை மேல் நாடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழு 5ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன் மலை கிராமப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் அண்ணாமலை ஈடுபட்டிருந்தார்.
நேற்று காலை பரப்புரைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட அண்ணாமலை, நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாமலையின் குடும்பத்தினர், அவரை மலைப் பகுதிகளில் இரவு முழுக்கத் தேடியுள்ளனர். விடியும்வரை அவர் கிடைக்கவில்லை.
தொடர்ந்து தேடிய அண்ணாமலையின் உறவினர்கள், கல்வராயன் மலைப்பகுதியின் கிராமம் ஒன்றில் அண்ணாமலை வாயில் நுரை தள்ளி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் கண்டுபிடித்தனர் .
பின்னர் அண்ணாமலையை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை என்பதையடுத்து, இன்று அண்ணாமலையை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலையின் மகன் மாது, கரியகோயில் காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சின்னதம்பி, அவரின் ஆதரவாளர்களால்தான் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அதிமுக வேட்பாளர் சின்னத்தம்பி, அவரின் ஆதரவாளர்கள் முருகேசன் உள்ளிட்ட பலரிடம் கரியகோயில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். திமுக வேட்பாளரை விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு கொலை - ஒருவருக்கு வலைவீச்சு!