சிறுவனை கடத்தி பட்டினி போட்ட கொடூரம்... 6 நாள்களுக்கு பிறகு மீட்பு

author img

By

Published : Aug 29, 2021, 7:32 AM IST

salem

சேலத்தில் பணத்திற்காகக் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன், ஆறு நாட்களுக்குப் பிறகு தனிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே நச்சுவாயனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, லதா தம்பதியின் 14 வயது மகன் சபரி.

இவர் கடந்த 22ஆம் தேதி விளையாட சென்றபோது திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே, கடந்த 26ஆம் தேதி சிறுவனின் தாய் லதா பணியாற்றும் துணி கடை உரிமையாளர் சரவணனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும்; ரூ.50 லட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளார்.

செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், திருட்டு செல்ஃபோன் என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் 27ஆம் தேதி மற்றொரு திருட்டு செல்ஃபோன் மூலம் சிறுவனை கட்டிப்போட்டு வைத்துள்ள வீடியோவை சரவணனுக்கு அனுப்பியுள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், சிறுவனை விரைந்து மீட்க ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சிறுவனை குகை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து செல்வகுமாரை கைது செய்த தனிப்படையினர், அவரது பட்டறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

6 நாட்களாக சிறுவனுக்கு உணவு ஏதும் வழங்கப்படாததால், மிகவும் பலவீனமாக காணப்பட்டுள்ளார். அச்சிறுவனை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.