ETV Bharat / state

அமெரிக்க பெண்போல் நடித்து ரூ.3.5 லட்சம் மோசடி!

author img

By

Published : Dec 10, 2020, 1:43 PM IST

court
court

ராமநாதபுரம்: வெளிநாட்டில் பணிபுரியும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞரிடம் அமெரிக்கப் பெண்போல பழகி முகநூல் மூலம் ரூ.3.5 லட்ச நிதி மோசடி செய்த இளம்பெண் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளம் அருகேவுள்ள இரட்டையூரணி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவஹரி. குவைத் நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவரும் இவருக்கு ஃபேஸ்புக் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்தது.

நீண்ட நாள்களாக இவர்கள் இரண்டு பேரும் முகநூல் தொடர்பில் இருந்த நிலையில், கிளாரா தனது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், அதற்கு உரிய தொகை செலுத்த வேண்டும் என்பதால் அதனை தந்து உதவினால்தான் சென்னைக்கு வரும்போது கட்டாயம் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க பெண்போல் நடித்து ரூ.3.5 லட்சம் மோசடி

இதை நம்பிய சிவஹரி, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் நான்கு தவணைகளில் மூன்று லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் கிளாரா தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்தப் பெண், தனது முகநூல் இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண் அமெரிக்க பெண்போல பேசிப் பழகி ஏமாற்றி தன்னிடம் பணம் மோசடி செய்துள்ளதை உணர்ந்த சிவஹரி, இது குறித்து டிஜிபி அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கார்த்திக் உத்தரவின்படி, குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பெண் உண்மையில் அமெரிக்காவிலிருந்து பேசினாரா அல்லது அமெரிக்காவில் இருந்து பேசுவதுபோல ஏமாற்றி உள்ளாரா என விசாரித்துவருகின்றனர்.

அந்தப் பெண் வழங்கிய வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் விசாரணை நடந்துவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.