ETV Bharat / state

தமிழ்நாட்டின் கடன் ரூ. 9 லட்சம் கோடி - ஹெச். ராஜா

author img

By

Published : Aug 16, 2021, 6:52 AM IST

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா

தமிழ்நாட்டின் கடனாக ரூ. 9 லட்சம் கோடி உள்ளது என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறினார்.

ராமநாதபுரம்: 75ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தேசத்திற்காக உழைத்த தேசிய தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கமுதி அருகே பசும்பொன்னில் கொண்டாடப்பட்டது.

கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து, தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார்.

கல்வித்துறையின் செயல்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களில் ரூ. 40 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கடன் தொகை ரூ. 9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசை வழிநடத்த திமுகவுக்கு தகுதி இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 என்று அறிவித்துவிட்டு, தற்போது தகுதியானவர்களை கண்டறிய தனி கமிட்டி அமைக்கப்படும் என திமுக அரசு பித்தலாட்டம் செய்கிறது.

குடும்ப பெண்களை தவறாகவும், பெண்களின் உடல் அமைப்பை இழிவாகப் பேசிய திண்டுக்கல் ஐ. லியோனியை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்திருப்பது கல்வித் துறையின் மோசமான செயல்.

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் நினைவாலயத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் நினைவாலயத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மேலும், அவர் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழில் அர்ச்சனை செய்வதைப் போன்று மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய உத்தரவிட தமிழ்நாடு முதலமைச்சருக்கு தைரியம், திராணி உள்ளதா.

சட்டப்படி நடவடிக்கை

தமிழ்நாட்டிலுள்ள 44 ஆயிரம் கோயில்களில் ஏற்கெனவே 40 ஆயிரம் கோயில்களில் பிராமணர்கள் அல்லாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர். இதனை திமுக அரசு மக்களிடம் புதிய செய்தியாக கொண்டுசென்று பரப்பி வருகிறது.

திமுக ஒரு மதத்தை மட்டுமே குறிவைத்து அரசியல் செய்துவருகிறது. அது ஒரு இந்து விரோத கட்சி. மேலும், சிவகங்கை மாவட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள்மீது ஆதாரங்கள் கிடைத்தவுடன் சட்டப்படி அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

இதையும் படிங்க: 'சுதந்திர தின விழா: மதுரையில் ரூ.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.