ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு ரூ.455 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டடம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலகம், மாணவ-மாணவியர் விடுதி கட்டடம் உள்ளிட்டவை கட்டப்பட்டுவருகின்றன.
இந்த மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டுமுதல் செயல்படும் வகையில் கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மலர்வண்ணனிடம் கேட்டபோது அவர், "ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வகுப்புகள் நடத்தும் அளவிற்கு நடைபெற்றுவருகின்றன.
இந்தப் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கத் தயாராக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
அதனடிப்படையில் விரைவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அலுவலர்கள், குழுவினர் வந்து பார்வையிட உள்ளனர். இவர்கள் ஆய்வுசெய்து பரிந்துரைப்பார்கள்.
அதன்பின்னர் மாணவர் சேர்க்கை நடைபெறும். திட்டமிட்டபடி இந்தாண்டு முதல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இணை பேராசிரியர்கள் நியமனம்
இதற்கேற்ப தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒன்பது இணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதலாக பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளும் வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி தயார் நிலையில் இருக்கும்" எனத் தெரிவித்தார்.