பரமக்குடி அருகே விவசாயி அடித்துக் கொலை - இருவர் நீதிமன்றத்தில் சரண்

author img

By

Published : Aug 24, 2021, 10:13 PM IST

paramkudi farmer murder  Two Surrendered in paramakudi

பரமக்குடி அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு(45). இவர், குடும்பத்துடன் தஞ்சாவூரில் சொந்தமாக ஆட்டுக்கிடை வைத்து ஆடுகளை மேய்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த கர்ணன் மகன் அஜீத் (24) குடும்பத்தினரும் தஞ்சாவூரில் ஆட்டுக்கிடை வைத்துள்ளனர்.

இந்நிலையில், திருநாவுக்கரசுக்கு, அஜீத்தின் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசு கடந்த 4 நாட்களுக்கு முன்பு செவ்வூர் கிராமத்தில் தான் கட்டிவரும் புதிய வீட்டிற்கு நிலை வைப்பதற்காக வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை செவ்வூர் ஆற்றாங்கரை பகுதியில் தனது அக்காள் மூர்த்தியம்மாள், அக்கா மகளுடன் திருநாவுக்கரசு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அஜீத், அவரது சித்தப்பா மகன் சச்சின்(19) ஆகிய இருவரும் திருநாவுக்கரசை வழிமறித்து தங்கையிடம் ஏன் தவறாக பழகுகிறாய் என கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளனர்.

இதனை திருநாவுக்கரசின் அக்கா, மருமகள் தடுத்த போது இருவரும் அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். அதனையடுத்து காயமடைந்த திருநாவுக்கரசு தனது அக்காள் வீட்டிற்குச் சென்று உறங்கியுள்ளார். இரவு 9 மணியளவில் திருநாவுக்கரசின் அக்கா காயத்திற்கு மருந்து போட தம்பியை எழுப்பியபோது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

பின்னர் மூர்த்தியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சத்திரக்குடி காவல்துறையினர், உயிரிழந்த திருநாவுக்கரசு உடலை கைப்பற்றி, அஜீத்(24), சச்சின்(19) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சிட்டிபாபு முன்னிலையில் அஜித், சச்சின் ஆகிய இருவரும் சரணடைந்தனர்.

இதையும் படிங்க: 10 சவரன் நகை, கார் திருட்டு - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.