ETV Bharat / state

‘காங்கிரஸ் - திமுக என்றாலே ஊழல் தான் நினைவிற்கு வரும்’ - அமித் ஷா விமர்சனம்!

author img

By

Published : Jul 28, 2023, 11:05 PM IST

Updated : Jul 28, 2023, 11:11 PM IST

Etv Bharat
Etv Bharat

ஊழலுக்கு எதிரான ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைபெறும் யாத்திரையை தொடங்கி வைத்த அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் திமுக என்றாலே ஊழல்கள் தான் மக்களின் நினைவுக்கு வருகிறது என விமர்சித்தார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா உரை

ராமநாதபுரம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன், தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை பலப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். 'என் மண், என் மக்கள்' என்ற நடைபயணமானத்தை இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின், தனது ரகசியங்களை செந்தில் பாலாஜி வெளியிடுவார் என்ற பயத்தில்தான் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யவில்லை. திமுக அமைச்சர்களில் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது செய்துள்ளனர். இருந்தபோதிலும், கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதிலும், அவர் அமைச்சராகவே இருக்கிறார். ஆனால், ஸ்டாலின் அவரை பதவியில் இருந்து நீக்கவில்லை. ஏனென்றால், ஸ்டாலின் பற்றிய அனைத்து ரகசியங்களையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுவிடுவார் என அஞ்சுகிறார்.

காங்கிரஸ் மற்றும் திமுக என்றாலே மக்களுக்கு காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், இஸ்ரோ ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் தான் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டை குடும்ப அரசியல், ஊழலற்ற தமிழ்நாடாக மாற்றவே கட்சியின் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த யாத்திரை அரசியல் யாத்திரை மட்டுமல்ல, ‘என் மண் என் மக்கள்’ தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்பும் யாத்திரையாகும். இந்த ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் பிரதமர் மோடியின் தேசியத்தை நிலைநாட்டப் போகிறார். ஐ.நா.வில் உலகின் பழமையான மொழியான தமிழில் முதலில் பேசிய பிரதமர் மோடிதான்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் மீது உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான விமர்சனங்களை தொடுத்தார். “இந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் இலங்கையில் தமிழர் படுகொலை நடந்தது. தமிழக மீனவர்கள் படுகொலைக்கு திமுகவும் காங்கிரஸும் தான் காரணம்” எனக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இந்த யாத்திரை மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் தேசியத்தை நிலைநாட்டுவோம். இந்த யாத்திரை 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக அமர்த்துவதற்கான தீர்க்கமான ஆணையைக் கோருகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கும் பாதயாத்திரை மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கடந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நிறைவடையும். 1068 கி.மீ., தூரம் வரை நடைபெறவுள்ள இந்த யாத்திரையில் சில பகுதிகள் நடந்தே சென்றும், மீதமுள்ள சில பகுதிகளை வாகனம் மூலமாகவும் கடக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவின் 3வது கூட்டம் மும்பையில் நடைபெறும் எனத் தகவல்!

Last Updated :Jul 28, 2023, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.