ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கீழவலசையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). இவர் காஞ்சிரங்குடியில் கடந்த 21 ஆண்டுகளாக அஞ்சல்காரராகப் பணியாற்றிவருகிறார்.
இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அவசர தேவைக்காக தனது அக்காவின் கணவர் தங்கவேலு என்பவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு நகை இரவல் வாங்கி அடகுவைத்துள்ளார்.
தங்கவேலுவின் மகளுக்குத் தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்துவருவதால் கொடுத்த நகையைத் திரும்பக் கேட்டுள்ளார்.
நகையைத் திருப்பித் தரவில்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் செய்வதாக தங்கவேல் தெரிவித்துள்ளார். இது தவிர மேலும் பலரிடம் ராமகிஷ்ணன் கடன் வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து கீழக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் அவரிடமிருந்து அவர் எழுதிவைத்த கடிதம் (மரண வாக்குமூலம்) கைப்பற்றப்பட்டது. அதில், தனது சாவுக்கு காரணம் காஞ்சிரங்குடி ஊராட்சித் தலைவர் முனியசாமி, தனது அக்கா கணவர் தங்கவேலு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.