ETV Bharat / state

ஆன்லைன் பண மோசடி- சைபர் கிரைம் விசாரணை

author img

By

Published : Jul 22, 2021, 2:53 PM IST

ஆன்லைனில் பண மோசடி
ஆன்லைனில் பண மோசடி

பரமக்குடி இளைஞரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்: பரமக்குடி பூவளந்தூர் பகுதியை சேர்ந்த சந்தான பாரதி (25), தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். சொந்தமாக கேமரா வாங்க வேண்டும் என்று விரும்பிய அவர், இது தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார்.

அச்சமயம், அவருக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அமெரிக்காவின் டெலிபோன், டெலிகிராப் நிறுவனத்தின் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கேமராவை ரூ.10 ஆயிரத்திற்கு சலுகை விலையில் தருவதாக தெரிவித்துள்ளனர்.

அதை நம்பிய இளைஞர், ஆன்லைன் மூலம் ரூ.10 ஆயிரம் செலுத்தியுள்ளார். அப்போது சலுகையில் பெற்ற வாடிக்கையாளர் என்ற முறையில் ஐபோன், சாம்சங் செல்போன், மோட்டார் சைக்கிள், ஐபேட், பிளே ஸ்டேசன் என பல விலை உயர்ந்த பொருள்கள் பம்பர் பரிசாக விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், மகிழ்ச்சியில் இருந்த சந்தான பாரதியிடம் இந்தப் பொருள்களை வாங்குவதற்கு செயல்முறை கட்டணமாக மேலும், ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் வெளிநாட்டில் இருந்து அனுப்புவதற்கு வரி, அனுப்பும் கட்டணம், சரக்கு வரி, வெளிநாட்டு பொருள்களை அனுப்புவதற்கான சான்றிதழ் கட்டணம் என அடுத்தடுத்த காரணங்களை கூறி பணம் பெற்று வந்துள்ளனர். இவ்வாறு ரூ.21 லட்சத்து 83 ஆயிரம் பணத்தினை பெற்றுக்கொண்ட கும்பல், மீண்டும் பணம் கேட்டு நச்சரித்துள்ளது.

இதனையடுத்து, இந்த மோசடி குறித்து சந்தான பாரதி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் புகார் அளித்துள்ளர். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் குற்றபிரிவு காவல் துறையினர் வழக்குபதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இளைஞர் தொடர்பு கொண்ட எண், வங்கி கணக்கு, ஆன்லைன் பண பரிவர்த்தனை விவரம் ஆகியவற்றினை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை அண்ணா சாலை கட்டடத்தில் தீ விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.