ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம்: சிறுவன் உட்பட 5 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்தம் சேகரிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 4:18 PM IST

வேங்கைவயல் விவகாரம்
வேங்கைவயல் விவகாரம்

Vengaivayal case DNA test: வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் ஒரு சிறுவன் உட்பட 5 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக இன்று ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

புதுக்கோட்டை: முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் நடைபெற்று 10 மாதங்கள் ஆன நிலையில், வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடிய நிலையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்தது. இதனைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதில் அன்று 3 பேர் ஆஜரான நிலையில் வேங்கைவயலை சேர்ந்த பட்டியலின மக்கள் 8 பேர் ஆஜராகவில்லை. பின்னர் அந்த 8 பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமல் இருந்த நிலையில், பின்னர் சிபிசிஐடி போலீசார் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியும், அதே போல் இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கைவயலை சேர்ந்த 8 பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி பாதிக்கப்பட்ட மக்களையே போலீசார் பரிசோதனைக்குட்படுத்த முயல்வதாக வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் அடிப்படையில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த 8 பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 8 பேரும் கடந்த 30ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலை சம்பந்தப்பட்ட 8 நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி அதனைப் படித்துப் பார்த்து அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் கடந்த 1ஆம் தேதி மீண்டும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தை தரலாம் என்று கூறி அந்த 8 பேரையும் அனுப்பி வைத்தார்.

அதன்பின் கடந்த 1ஆம் தேதி சம்பந்தப்பட்ட 8 பேரும் மீண்டும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் இவர்களுடன் இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரான நிலையில் டிஎஸ்பி பால்பாண்டியிடம் நீதிபதி இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எதனால் செய்யப்படுகிறது என்று கேட்ட நிலையில், டிஎஸ்பி பால்பாண்டியன் இந்த வழக்கை பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளதால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட 8 பேருக்கு மட்டும் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க அனுமதி கேட்கவில்லை என்றும் அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட 8 நபர்கள், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களையே விசாரணைக்கு உட்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும் அதனால் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக 8 பேரும் தனித்தனியாக ஒரே பதிலை தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதி இந்த வழக்கில் கடந்த ஜூலை 4ஆம் தேதி ”இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காக மறுநாள் ஜூலை 5ஆம் தேதி 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ரத்த மாதிரி கொடுக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து கடந்த 5ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 4 சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து இறையூர் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் 16 வயதுடைய சிறுவன் தரப்பில் ஆஜரான வக்கீல் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிபதியிடம் கூறினார். மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சிபிசிஐடி காவல்துறை சம்மன் வழங்கியது எப்படி எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து, அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களும் பெற்றோர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

நான்கு சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு இருந்த நிலையில், நான்கு சிறுவர்களின் பெற்றோர்களும் டிஎன்ஏ பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், சிபிசிஐடி போலீசாரின் அனுமதி கேட்டு உள்ள மனுவின் மீது கடந்த ஜூலை 17ஆம் தேதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி ஜெயந்தி கூறி ஒத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று ஒரு சிறுவன் உட்பட 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் ரத்த மாதிரி சேகரிக்க
இறையூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த இருவர் என 6 பேருக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்க நீதிபதி ஜெயந்தி சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கினர்.

இந்த நிலையில் ஒரு சிறுவன் உட்பட 6 பேருக்கு இன்று புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட இருந்த நிலையில் இதில் ஒருவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு மட்டும் இன்று மாலை டிஎன்எ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு ஏற்கனவே டிஎன்ஏ மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “தண்ணீர் வழங்காத கர்நாடக அரசுக்கு மின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” - விவசாயி நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.