ETV Bharat / state

மனநல காப்பகங்களில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Jul 19, 2023, 8:22 PM IST

strict-action-will-be-taken-any-malpractice-in-mental-institutions-minister-m-subramanian
மனநல காப்பகங்களில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மனநல காப்பகங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

மனநல காப்பகங்களில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதுக்கோட்டை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் மயக்க மருந்துக்கு பின் தீவிர சிகிச்சைப் பிரிவு, 62 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 நவீன படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதற்கு முன் நேற்று அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்த அதிரடி சோதனையில் அங்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் 59 பெண்கள் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் சிகிச்சைப் பெற்று வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக மனநல காப்பகத்திற்கு அனுமதியை ரத்து செய்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளாத சுகாதாரத் துறை இணை இயக்குநர் பணியிட நீக்கம் செய்யப்பட்டதோடு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னர் 59 பேர்களும் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ''நேற்று அன்னவாசல் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தபோது அங்குள்ள மன நல காப்பகத்தைப் பார்வையிட்டபோது அங்கு 59 பெண்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

அந்த காப்பகத்தை தனியார் தொண்டு நிறுவனம் நடத்துகிறது. ஆண்டுக்கு 16 லட்சம் ரூபாய் அரசு இந்த காப்பகத்திற்கு வழங்குகிறது. ஆனால், சம்மந்தப்பட்ட காப்பகம் முறையாக செயல்படவில்லை. அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 59 பேரில் 8 பேருக்கு மேல் சுயநினைவுடன் உள்ளனர். அவர்கள் 59 பேரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் இதுபோன்ற மனநல காப்பகங்களை உடனடியாக மருத்துவத் துறை அதிகாரிகள் இணை இயக்குநர்கள் ஆய்வு செய்து, முறையாக அவைகள் இயங்குகிறதா என்பது குறித்து அறிக்கையை அரசிற்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட இணை இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மனநல காப்பகங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் காலியாக இருந்த 4,308 மருத்துவப் பணியிடங்களில் பாதி பணியிடங்கள் நிரப்பப்பட்டு முதலமைச்சர் கையால் அவர்களுக்கான பணியாணை வழங்கப்பட்டுள்ளது. 1,021 மருத்துவப் பணியிடங்களுக்குத் தேர்வு எழுதியுள்ள மருத்துவர்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். பணி நியமனம் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.

983 மருந்தாளுநர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்களுக்கு எம்ஆர்பி மூலம் நேர்காணலுக்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களும் பணியமர்த்தப்படுவார்கள்.இந்த ஆண்டு மருத்துவர் மாணவர் சேவைக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. புதுக்கோட்டையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, எம்எல்ஏ முத்துராஜா புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : MK Stalin letter to PM Modi:பருத்தி மீதான 11% இறக்குமதி வரியைத் திரும்பப் பெறுக - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.