புதுக்கோட்டை: ஆவுடையார் கோவில் அருகே கரூர் ஊராட்சியில் உள்ள விளாங்காட்டூர் பகுதியில் நெற்பயிர்களின் வயல்களில் மழை நீர் தேங்கியதால் பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் பெறும் வேதனைக்குள்ளாகினர்.
நீரில் மூழ்கி நாசமான பயிர்கள்
தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழை பல்வேறு பகுதிகளில் பெய்துவந்த நிலையில் அணைகள், கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் சேதமடைந்துள்ளன.
ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட கரூர் ஊராட்சியில் உள்ள விளாங்காட்டூர், பில்லுக்குடி, வெண்ணந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கியும் புகையான் இடைப்பழம் தாக்கியும் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மேலும் அவர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து மற்றும் வங்கியில் கடன் பெற்று விவசாயப் பணிகளை சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஏக்கருக்கு செலவு செய்து விவசாய தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நாசம் அடைந்தன.
வேளாண் துறை அலுவலர்களை சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு - கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை!