புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (டிச.02) நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. தொடர்ந்து இன்று (டிச.03) காலை முதல் புதுக்கோட்டை, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்தது.
குறிப்பாக, கடந்த இரண்டு மணி நேரமாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியிலுள்ள குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு, கால்வாய் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், நகரின் பிரதான சாலையான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகியவை மழைநீரால் சூழ்ந்துள்ளன.
இதேபோன்று திமுக அலுவலகம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.