ETV Bharat / state

"சிறார் கூர்நோக்கு மையங்கள் மீது கூடுதல் கவனம் வைக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தப்படும்" - NCPCR உறுப்பினர் தகவல்

author img

By

Published : Apr 29, 2023, 10:46 PM IST

Etv Bharat
Etv Bharat

சிறார் கூர்நோக்கு மையங்களில் இருந்து சிறார்கள் தப்பியோடிய விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு சமீபகாலமாக தமிழ்நாடு அரசு, சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம் சாட்டிய அதன் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், இதுகுறித்து நேரடியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்த்

புதுக்கோட்டை: சிறார் கூர்நோக்கு மையங்கள் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர் எனவும், இவை குறித்து கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் உரிய இடமில்லாமல் தரையில் அமர வைத்து பாடம் சொல்லித் தருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழுவிற்கு புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் இன்று (ஏப்.29) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு என்பது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாணவ மாணவிகள் அமர்வதற்கு உரிய இடங்கள் உள்ளதா? அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, டாய்லெட் வசதி என்பது ஆகியவை செய்து தரப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரிய டாய்லெட் வசதிகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆணைய உறுப்பினர் உடனடியாக மொபைல் டாய்லெட் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை வழங்கினார்.

அதன் பேரில், உடனடியாக மொபைல் டாய்லெட் அமைக்கப்படும் என்று ஆட்சியர் அந்த இடத்திலேயே உறுதி அளித்தார். இதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், 'சிறார் கூர்நோக்கு மையங்கள், பாதுகாப்பு மையங்கள் ஆகியனவற்றின் மீது தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர் என்றும் இவை குறித்து கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து சிறுவர்களின் மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்.

சிறார் கூர்நோக்கு மையங்களில் பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆணையம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்ததாகவும் ஆனால், இதுகுறித்து தமிழக அரசு சரிவர நடவடிக்கை எடுக்காததால் தான் சிறார்கள் அங்கிருந்து தப்பித்து செல்லும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் ஆகவே, இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், 'தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், சமீபகாலமாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகளை கண்டறிந்து தவறுகளை சுட்டிக்காட்டி வருவதாக தெரிவித்த அவர், இதனால், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு சமீபகாலமாக தமிழக அரசு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து நேரடியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விரைவில் சந்திக்க உள்ளதாகவும், புகார் வந்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரோடு, புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மொபைல் டாய்லெட் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த மாவட்ட ஆட்சியரை ஆணையம் பாராட்டுவதாக' தெரிவித்தார்.

தொடர்ந்து 'மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் ஆணையம் ஆட்சியரிடம் உத்திரவாதம் பெற்றுள்ளது. மேலும், விரைவில் புதுக்கோட்டையில் ஆணையத்தின் சார்பில் குழந்தைகள், மாணவ மாணவிகள் தங்களுடைய குறைகளை புகார்களாக தெரிவிக்கும் குழு ஒன்று தொடங்கப்பட உள்ளதாகவும்' கூறினார்.

இதையும் படிங்க: பல நாட்களாக கைவரிசை காட்டிய பலே திருடன்: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்: நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.