ETV Bharat / state

"சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறை அமைச்சர்" - புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதியை விளாசிய அண்ணாமலை!

author img

By

Published : Aug 4, 2023, 1:22 PM IST

கமிஷன், கலெக்சன், கரப்சன் தான் திமுக ஆட்சி என அண்ணாமலை பேச்சு
கமிஷன், கலெக்சன், கரப்சன் தான் திமுக ஆட்சி என அண்ணாமலை பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் “என் மண் என் மக்கள்” நடைபயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கமிஷன், கலெக்சன், கரப்சன் தான் திமுக ஆட்சி என அனல் பறக்கப் பேசினார்.

கமிஷன், கலெக்சன், கரப்சன் தான் திமுக ஆட்சி என அண்ணாமலை பேச்சு

புதுக்கோட்டை: சிறையில் இருக்க வேண்டிய அமைச்சர் ரகுபதி, சிறைத்துறை அமைச்சராக இருப்பது வேதனையளிக்கிறது எனவும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு பிரதமர் மோடியால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் ஆலங்குடியில் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனது பாதயாத்திரையை தொடங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆறாவது நாளாக புதுக்கோட்டை பாஜக கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருமயம் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் நடை பயணத்தை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஏழாவது நாளான நேற்று (ஆகஸ்ட் 3) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபயணம் செய்தார். அரிமளம் விளக்கு சாலையில் இருந்து நடை பயணமாக வந்த அண்ணாமலையை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அழைத்து வந்தனர். அவருக்கு கும்ப மரியாதை அளித்த பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அங்கிருந்து நடைப்பயணமாக வந்த அண்ணாமலை சந்தைப்பேட்டை, வடகாடுமுக்கம், அரசமரம், காமராஜர் சிலை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட சாலைகளின் வழியாக சென்று இறுதியில் காமராஜர் சிலை அருகே பேசினார்.
அப்போது அவர், “கமிஷன், கலெக்சன், கரப்சன் இதுதான் தமிழகத்தில் திமுக ஆட்சியின் முகவரியாக உள்ளது.

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ரகுபதி மீது வழக்கு உள்ளது. சிறையில் இருக்க வேண்டியவர், தற்போது சிறைத்துறைக்கு அமைச்சராக உள்ளது வேதனை அளிக்கிறது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் இந்தியா 21 வது இடத்தில் உள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. இந்த இரண்டு அமைச்சர்களும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி மட்டுமே. அங்கு அவர் 60 ஆயிரம் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து உள்ளார்.

120 கோடி மதிப்பீட்டில் இலங்கை யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையத்தை பிரதமர் மோடி கட்டிக் கொடுத்து உள்ளார். இலங்கை ஈழ பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்.
புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் கொண்டுவர கடிதம் எழுதி உள்ளோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளது சீக்கிரம் நடவடிக்கை எடுக்கபடும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு டீ கப் பயன்படுத்திய விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.