ETV Bharat / state

குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி மோசடி; 'ஒரு நாள் விடுமுறை' என ஒட்டிவிட்டு எஸ்கேப்பான பலே கில்லாடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 12:54 PM IST

Fraud by claiming to pay low interest in pudukkottai
குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி மோசடி

Money fraud issue: அறந்தாங்கியில் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி மோசடி செய்துவிட்டு, ஒரு நாள் விடுமுறை என ஒட்டிவிட்டு நூதன முறையில் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி மோசடி

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் உள்ள காரைக்குடி சாலையில் NKB என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில், அறந்தாங்கி பகுதிகளில் இருக்கக்கூடிய எளிமையான நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு குழு என்ற பெயரில் பணம் தருவதாக ஏஜென்டாக உள்ள குணநாதன் ஆசை வார்த்தை காட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பணமாக 10 நபர்கள் குழு சேர்ந்து ஒரு நபருக்கு ரூபாய் 1,341 வீதம் ரூபாய் 13 ஆயிரத்து 410 செலுத்தினால், ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் பணம் தரப்படும் என கூறியதாக தெரிவிக்கின்றனர்.

அந்த ஆசை வார்த்தையை நம்பிய அப்பகுதி மக்கள் 52 குழுக்களாக சேர்ந்துள்ளனர். அதில் முழுமையாக 32 குழுக்களைச் சேர்ந்த நபர்கள் பணம் கட்டி உள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தனிநபர் கடன் தருவதாகக் கூறி, 231 நபர்களிடம் முன் தொகையாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து, 1 லட்சம் ரூபாய்க்கு 5 ஆயிரம் டிடி (DD) எடுத்துக் கொடுக்க வேண்டும்.

மேலும், இதேபோல 7 லட்சம் ரூபாய் வரை கடன் தருகிறோம், அதற்கு ரூ.35 ஆயிரம் டிடி எடுத்து கொடுக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய பொதுமக்கள் பணத்தையும் செலுத்தியுள்ளனர். பின்பு இன்று பணம் ஏறும், நாளை பணம் ஏறும் என கூறியதால், சந்தேகம் அடைந்த நபர்கள் ரகசியமாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ஆய்வாளர் பிரேம்குமார், இந்த நிதி நிறுவனம் குறித்த ஆவணங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறி எச்சரித்து சென்றதாகத் தெரிகிறது. இதனால் சுதாரித்துக் கொண்ட பண மோசடி கும்பல், 'இன்று ஒரு நாள் விடுமுறை' என நோட்டீஸ் அடித்து ஒட்டி விட்டு நிதி நிறுவனத்தை மூடிச் சென்றுள்ளனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, மொபைல் அணைக்கப்பட்டதால் (Switch off), நாம் ஏமாந்து விட்டோம் என நினைத்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் ஒருவராக தற்பொழுது புகார் அளித்து வருகிறனர்.

பின்னர் இது தொடர்பாக விசாரணை செய்து பார்த்த பொழுது, அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்த குணநாதன் என்பவர் இதே போன்று MLM நிறுவனங்களில் பணிபுரிந்து, பல நபர்களிடம் பணத்தை பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது தலைமறைவாக உள்ள NKB நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை கைது செய்து விசாரணை செய்தால் மட்டுமே, இதுவரை எத்தனை லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டது என தெரிய வரும் என்று அறந்தாங்கி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.