ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு; அக்.30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 1:49 PM IST

Etv Bharat
Etv Bharat

C.Vijayabaskar: அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடுத்த வழக்கு விசாரணையை, வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை: தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2016 முதல் 2021 வரை ஆறு ஆண்டுகளில் 35.79 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அலுவலகங்கள் மற்றும் இலுப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல்குவாரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை செய்தனர்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற அந்த சோதனையில் 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம், 3.76 கிலோ வெள்ளி, 135 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றுகள், 19 ஹார்ட் டிஸ்க்குகள், புல்லட் ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 17-10-2021-இல் வழக்குப் பதிவு செய்து 19 மாதங்கள் ஆகிய நிலையில், கடந்த மே 22ஆம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா ஆகியோர் மீது 35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவருக்கும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஜராகினர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த், கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். மேலும், அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்குப் பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் எனவும் நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் சில பக்கங்கள் இல்லை என்றும், அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கினை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தும், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது மனைவி ரம்யா ஆஜராகவில்லை. அப்போது நடைபெற்ற விசாரணையில் குற்றப்பத்திரிகையில் விடுபட்ட பக்கங்களை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதனையடுத்து வருகிற 30ஆம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கினை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டைக்கு ரூ.2,195 கோடியில் தனி கூட்டு குடிநீர் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.