ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்; வேறு மாநிலங்களில் வேண்டுமானால் இருக்கட்டும்: ப.சிதம்பரம் கருத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 10:48 PM IST

அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரை
அரசு ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரை

Pa.Chidambaram on Neet Exam: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (அக்.22) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

புதுக்கோட்டை: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 1.25 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (அக்.22) நடைபெற்றது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி, கட்டிடப் பணியை தொடங்கி வைத்தனர். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கட்டிடத்தை முறையாக தரத்துடன் கட்ட வேண்டும் என்றும் 30 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கக்கூடிய அளவில் கட்டிடப் பணிகள் நடைபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பின்வருமாறு பேசியதாவது, "என்னைப் பொறுத்தவரை எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை சிறிய சிறிய பணிகளுக்கு நான் ஒதுக்குவதில்லை. கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டிற்கும் தான் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறேன். நீண்ட நாள் நிலைத்து நிற்கக்கூடிய மக்களுக்கு தேவைப்படும் பணிக்கு தான் நிதி ஒதுக்கி அந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றேன்.

சிறிய சிறிய பணிகளுக்கு நான் நிதி ஒதுக்குவதில்லை என்று பலரும் என்னிடம் புகார் கூறுகின்றனர். நான் சிறிய பணிக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்றும், சிறிய பணியை வேண்டும் என்றால் இந்த தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளேன். மேலும் மக்கள் வரிப்பணத்தில் தான், இது போன்ற திட்ட பணிகளுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. கட்டிட பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் முறையாக கட்டிடத்தை தரமானதாக கட்ட வேண்டும்.

சில ஒப்பந்ததாரர்கள் 30 ஆண்டு காலம் நிலைத்து நிற்கக்கூடிய அளவில் நாங்கள் கட்டிடம் கட்டி தருகிறோம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். எந்த ஒரு தொழில்நுட்பம் இல்லாத காலத்திலும் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டிய கல்லணை தற்போது வரை நன்றாக உள்ளது. அதேபோல் 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தாஜ்மஹாலும் வலுவான நிலையில் உள்ளது.

அப்படி இருக்கையில் தற்போது அனைத்து தொழில் நுட்பங்களும் கையில் இருக்கக்கூடிய நிலையில், ஏன் நீங்கள் கட்டக்கூடிய கட்டிடம் 30 ஆண்டு காலம் மட்டுமே வரும்? எப்போதும் நிலைத்து நிற்கக்கூடிய அளவிற்கு கட்டிடப்பணி தரமானதாக இருக்க வேண்டும் என்றும், மாதத்திற்கு ஒருமுறை நான் நேரடியாகவே கட்டுமான பணியை பார்வையிடுவேன் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.

கட்டிடப் பணியை மாதத்திற்கு ஒருமுறை நான் மட்டும் பார்வையிட்டால் போதாது. மக்கள் வரிப்பணத்தில் கட்டக்கூடிய கட்டிடம் முறையாக கட்டப்படுகிறதா என்று அந்தந்த பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் ஒரு குழு அமைத்து தினசரி காலை, மாலை என இரு வேலைகளிலும் கண்காணித்து முறையாக சிமெண்ட் போடப்படுகிறதா, சென்ட்ரிங் அமைக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். அதுவே உங்களது தலையாயப் பணி.

மேலும் தற்போது கொத்தமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஆண் மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். இரண்டு மருத்துவர்கள் இருக்க வேண்டும். அதனால் இங்கு ஒரு பெண் மருத்துவரை நியமிக்க இந்த தொகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் நானும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுது உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கரோனா காலத்தில் இரண்டு ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்காமல் இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களை வேதனையடைய செய்தது. மக்களுக்கு வேண்டிய பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது‌. அப்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் கூட வாங்கி கொடுக்க முடியாத சூழல் நிலவியது.

கரோனா காலத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் இரண்டு ஆண்டு காலம் நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் இருந்தது தவறு. இது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நிதி ஒதுக்கீடு குறித்து கேளுங்கள் என்று கேட்டதற்கு அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கே அச்சப்பட்டனர்.

சாதிவாரி கணக்கு என்பது தேவை. ஏனென்றால் அரசு வேலைகளில் பள்ளி கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யலாம், புள்ளி விவரம் இல்லாமல் கணக்கில்லாமல் எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும், நாடாளுமன்றத்தில் கூட ஒரு நண்பர் வேடிக்கையாக ஒன்றை கூறினார், புலிகள் யானைகளை கூட கணக்கீடு செய்யப்படுகிறது என்று. எந்த ஒடுக்கப்பட்ட மக்களோ தாழ்த்தப்பட்ட மக்களோ வறுமையில் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் தான் தெரியும்.

பத்தாண்டுக்கு ஒருமுறை எடுக்கக்கூடிய சென்செக்ஸ்யே இந்த மத்திய அரசு எடுக்கவில்லை. 2021ல் எடுத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது 2023ம் ஆண்டு முடியப்போகிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கக்கூடிய கணக்கையே எடுக்கவில்லை. அடுத்து சென்செக்ஸ் கணக்கெடுப்பு நடக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு நடக்கும் போது சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை நான் வரவேற்கிறேன், ஏற்கிறேன்.

நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. மற்ற மாநிலங்கள் தேவை என்று நினைத்தார்கள் என்றால் அதை வைத்துக் கொள்ளட்டும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் ஆரம்ப காலத்தில் இருந்து வைக்கக்கூடிய கோரிக்கை. தமிழ்நாட்டில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்ட கோரிக்கை நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான்.

நீட் தேர்வு இல்லாமல் தான் புகழ்பெற்ற மருத்துவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் என்னுடைய கருத்தும். திமுக 'கையெழுத்து இயக்கம்' நடத்துவது என்பது ஜனநாயக முறைப்படி அவர்கள் நடத்துகின்றனர். கையெழுத்து இயக்கம் ஜனநாயக முறைக்கு உட்பட்டதுதான்.

நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவோம் என்று மக்களை திசை திருப்ப வேண்டாம் என்று கூறும் கட்சிகள், இதனை அவர்கள் செய்யட்டும். எங்களுக்கு செய்ய முடியவில்லை. நீங்கள் சாமர்த்தியசாலிகளாக இருந்தால் நீங்கள் செய்யுங்கள். செய்வதை குறை கூறுகிறார்கள். இதைத்தவிர அவர்கள் இதை செய்வோம் அதை செய்வோம் என்று மட்டுமே சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வாங்குறீங்களா.. கொஞ்சம் கவனீங்க..! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!
1) Conclusion:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.