ETV Bharat / state

“காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட திமுக அரசு ஒதுக்காதது ஏன்?” - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 10:25 AM IST

Admk 52th anniversary celebration
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

AIADMK 52th anniversary celebration: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகவும் பொலிவோடும், வலிவோடும் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதிமுகவின் எதிர்காலம் எடப்பாடி தலைமையில் பிரகாசமாக உள்ளது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், "அதிமுகவின் எதிர்காலம், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரகாசமாக உள்ளது. அதிமுகவிற்கு அதிகப்படியான வெற்றி வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திறக்காவிட்டால், அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவரையும், 24 மணி நேரமும் செயல்பட சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பிறகும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தலையிட்டு, உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இந்த பிரச்னையை அரசு கண்டும் காணாமல் போயிருப்பதன் விளக்கத்தைக் கூற வேண்டும். மக்கள் பிரச்னையை ஓங்கி குரல் கொடுக்கின்ற இயக்கமாக அதிமுக உள்ளது. ஆனால், ஆளுங்கட்சி மிகவும் சுணக்கமாக செயல்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொலிவோடும், வலுவோடும் உள்ளது.

அதிமுகவிற்கு வரும் காலம் வசந்த காலம். அதிமுக ஆட்சிக் காலத்தில் 8 மாவட்ட விவசாயிகளின் கனவுத் திட்டமான காவேரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு, 7 ஆயிரம் கோடி நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு, 140 கோடி ரூபாய்க்கு நிதியானது, அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தற்போது பணியானது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த திட்டத்திற்காக திமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட பணம் ஒதுக்காதது ஏன்? இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று வந்துள்ளது. காய்ச்சலே இல்லாமல் உடம்பு வலி, சளி ஆகியவற்றோடு வருகிறது.

இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். காய்ச்சல் முகாம் என்று அரசு அறிவித்தது. ஆனால், அரசு அறிவித்த காய்ச்சல் முகாம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது. அரசு அறிக்கை மூலமாக செயல்படாமல், களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஏன் எங்க ஊருல நிறுத்தல" - பட்டாகத்தியுடன் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள்; பரபரப்பு சிசிடிவி காட்சி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.