ETV Bharat / state

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை!

author img

By

Published : Apr 19, 2023, 7:41 PM IST

Etv Bharat
Etv Bharat

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாணவர்கள், பட்டதாரிகளுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாதம் குறிப்பிட்ட தொகையை, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த சிறப்பான திட்டத்தின் கீழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் லட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். அந்தவகையில், இந்த திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஏப்.19) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் என 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 (ரூ.எழுபத்து இரண்டாயிரம்) மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ/மாணவியருக்கு மற்றும் ஏற்கனவே, உதவித்தொகை பெற்றவர்களுக்கும் இது வழங்கப்பட மாட்டாது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் என 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக்கூடாது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துக் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும், இந்த உதவித்தொகை பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது' என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: படித்துவிட்டு வேலையில்லையா.? உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க.. தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.