பெரம்பலூர்: மயானத்திலிருந்து வரும் புகையினால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் சாலையில் பெரம்பலூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள எரிவாயு தகன மேடை உள்ளது. இங்கு எரிவாயு கொண்டு இறந்தவர்களின் உடல்களை எரியூட்டி தகனம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனால், தினமும், காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை இறந்தவர்களின் உடல்கள் இரவு பகலாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இப்படி எரியூட்டப்படும்போது ஏற்படும் புகை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, வீடுகளில் புகை படியும் சூழல் ஏற்பட்டு காற்று மாசுபாடும் ஏற்பட்டுள்ளது.
எனவே, இதை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அதிகமான போக்குவரத்து இல்லை என்றாலும், சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் காவல் துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் புகை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.