ETV Bharat / state

பெரம்பலூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

author img

By

Published : Apr 4, 2021, 4:50 PM IST

Updated : Apr 4, 2021, 4:59 PM IST

perambalur district watch
பெரம்பலூர் தொகுதிகள் வலம்

பெரம்பலூர், ஆச்சரியங்கள் பலவற்றை தன்னுள் அடைகாத்து வைத்திருக்கும் மாவட்டம். மாநிலத்தில் மக்கள் தொகை குறைவான மாவட்டம், பேரவைத் தேர்தலுக்கான தனது தொகுதி ஒன்றை பக்கத்திலிருக்கும் அரியலூருடன் பங்கு போட்டுக் கொண்டுள்ள மாவட்டம். மாநிலத்தின் சின்ன வெங்காயத் தேவையில் கணிசமான அளவு பூர்த்தி செய்யும் மாவட்டம் என, அடுக்கடுக்காக ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது.இந்தத் தொடர்ச்சியின் சமீபத்திய ஆச்சரியம், மாவட்டத்தின் குன்னம் பகுதியில் குடிமராமத்து பணிக்காகத் தோண்டிய ஏரியில் உருண்டையான கற்படிமங்கள் தென்பட்டன. அதனை 'டைனோசர்' முட்டை என நினைத்து அனைவரின் விழியும் விரிய, முறையான ஆய்வுக்குப் பின், அது முட்டையில்லை, 'அம்மோனைட்' என்ற கடல் வாழ் உயிரினம் என ஆச்சரியத்தை விதைத்து, தன் வயதையும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இந்த நிலம் கடலாக இருந்ததையும் உலகிற்கு உணர்த்தியது பெரம்பலூர் மாவட்டம். கனிம வளங்கள் நிறைந்த இம்மாவட்டத்தின் முக்கியத் தொழில் விவசாயம். சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் விளைச்சலில் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமான பெரம்பலூர், பின்னர் 2007 ஆம் ஆண்டு அரியலூரை தன்னிலிருந்து பிரித்து தனிமாவட்டமாக கொடுத்தது. மாவட்டத்தின் தற்போதைய எல்லையாக வடக்கில் கள்ளக்குறிச்சி, தெற்கில் திருச்சிராப்பள்ளி, மேற்கில் நாமக்கல் மற்றும் வடமேற்கில் சேலம் மாவட்டங்கள் அமைந்துள்ளன.

வாசல்:

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தனித் தொகுதி, குன்னம் பொதுத் தொகுதி என, இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

தொகுதிகள் உலா:

பெரம்பலூர்(தனி): மாவட்டத்தில் முழுமையாகவுள்ள தொகுதி இது. தனித் தொகுதி. இங்குள்ள சிறுவாச்சூர் மதுகாளியம்மன் கோயில் தமிழ்நாடு அளவில் பிரபலமானது. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோயில் தொகுதியின் பிரபலமான வழிபாட்டுத் தலங்களாகும்.

தொகுதியில் அதிகமாக இருக்கும் கல்குவாரிகள் மூலமாக அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. ரயில் பாதையே இல்லாத மாவட்டம் பெரம்பலூர். அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக சேலத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும். பருத்தி, சின்ன வெங்காயம், மக்காச்சோளத்திற்கு நிரந்தரமாக கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்தேக்கத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; தொகுதியில் மூடப்பட்டுள்ள சின்ன வெங்காயத்திற்கான குளிர்பதனக்கிடங்கை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்; மயிலூற்று அருவியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்; கொட்டாரை நீர்தேக்கத்திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பன போன்றவை தொகுதியின் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களாகும்.

குன்னம்: தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தொகுதி குன்னம். இந்தத் தொகுதியின் சில பகுதிகள் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. உ.வே.சாமிநாதன், தன் சிறுவயதில் பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றது இங்குதான். சாத்தனூரில் அமைந்துள்ள தேசிய கல்மரப் பூங்கா, பரவாய், பென்னகோணம் பெருமத்தூர் போன்ற பகுதிகளில் பரவலாக கிடைக்கப் பெற்ற புத்தர், மகாவீரர் சிலைகள் தொகுதிக்கான சரித்திர சான்றுகள்.

பெரம்பலூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். பருத்தியும், மக்காச்சோளமும் அதிகம் விளைகின்றன. இங்குள்ள கனிமச் சுரங்கங்களால் விளைநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், இங்கு தொடங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலமும், எதிர்பார்க்கப்பட்ட வேலைவாய்ப்புகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இங்கு அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவமனையும் இன்னும் தொடங்கப்படவில்லை. பருத்தி விளைச்சல் அதிகமுள்ள இத்தொகுதியில் பருத்தி சார்ந்த தொழிற்சாலை தொடங்க வேண்டும்; முந்திரி விளைச்சல் அதிகம் இருப்பதால் முந்திரியை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்; செந்துறை தாலுகாவில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பதும் இந்தத் தொகுதி மக்களின் வேண்டுகோள்களாகும்.

களநிலவரம்:

ஆய்வாளர்களின் சொர்க்கபுரியாக விளங்குகிறது பெரம்பலூர் மாவட்டம். வீடு கட்ட வானம் தோண்டுவது, குளங்கள் ஏரிகள் குடிமராமத்து எதற்காக தோண்டினாலும் கல்மரங்களையும் ஃபாசில்கள் எனப்படும் பழங்கால எச்சங்களையும் தாராளமாய் தருகிறது பெரம்பலூர். சுண்ணாம்பு பாறைகள், கனிமவளங்கள் அதிகம் உள்ள இந்த மாவட்டத்தால் அரசுக்கு வருமானமும் கிடைக்கின்றது.

விவசாயம் தவிர வேலை வாய்ப்புக்கு வழியில்லாத பெரம்பலூரில்,வேலைவாய்ப்புக்காக கொண்டுவரப்பட்ட பொருளாதார மண்டலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சின்ன வெங்காயம், மக்காச்சோளம் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்; பருத்தி சார்ந்த தொழிற்சாலைகள், முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்தத் தேர்தலை சந்திக்கிறது பெரம்பலூர்.

மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளும் அதிமுக வசமே உள்ளன. பெரம்பலூர் தொகுதியில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பதவியில் இருந்து தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெற்றது, விசுவக்குடி அணைத்திட்டத்தைக் கொண்டு வந்தது என தொகுதிக்குள் நல்ல பெயர் இருப்பதால், இந்த முறையும் அதிமுகவிற்கே அதிக வாய்ப்பு என்றும் அரியலூர் மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் இரவல் பெற்றுள்ள குன்னம் தொகுதிவாசிகள், தங்கள் வேட்பாளரை இரவல் பெறத் தயாராய் இல்லை. இந்தத் தொகுதியின் திமுக வேட்பாளர் அரியலூர் மாவட்டத்துக்காரர் என்பதால் உள்ளூர்வாசியான அதிமுக வேட்பாளர் வெற்றி வாய்ப்பையும் தட்டிப்பறிக்கிறார் என்ற பேச்சும் தொகுதிக்குள் உண்டு.

Last Updated :Apr 4, 2021, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.