ETV Bharat / state

டெண்டர் போட வந்த பாஜகவினரை வழிமறித்து திமுகவினர் ரகளை... மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:47 PM IST

DMK fight issue
டெண்டர் போட வந்த பாஜகவினரை வழிமறித்து திமுகவினர் ரகளை

DMK fight issue: பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில் டெண்டர் போட வந்த பாஜகவினரை, திமுகவினர் வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதால், நடைபெற இருந்த 31 கல்குவாரிக்கான ஏலத்தினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் ரத்து செய்வதாக அறிவித்தார்.

டெண்டர் போட வந்த பாஜகவினரை வழிமறித்து திமுகவினர் ரகளை

பெரம்பலூர்: எளம்பலூர், கல்பாடி வடக்கு, செங்குணம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம் மற்றும் பாடாலூர் கிழக்கு ஆகிய கிராமங்களில் 31 இடங்களில் உள்ள குவாரிகளில் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலத்திற்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று (அக்.30) துவங்கி மாலை 5 மணியளவில் முடிவடைய இருந்தது.

அந்த வகையில் ஒவ்வொரு குவாரிக்கும் அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட, அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்கள், மறைமுகமாக ஏலத்திற்கான விண்ணப்பத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் முத்திரையிட்டு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (அக்.31) டென்டர் பெட்டி பிரிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருந்தது.

இந்த நிலையில், பெரம்பலூர் கவுல்பாளையத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாவட்டத் துனை தலைவருமான கலைச்செல்வன், அவரது சகோரதர் முருகேசன் பெயரில் கல்குவாரியை ஏலம் எடுப்பதற்கான டெண்டர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவரான வேலூரைச் சேர்ந்த முருகேசன் டெண்டர் பெட்டியில் போடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

அப்போது, அவர்களை திமுகவினர் உள்ளிட்ட ஒரு கும்பல் வழிமறித்து டெண்டரை போட விடாமல் தடுத்துள்ளனர். அதையும் மீறி அவர்கள் அலுவலகத்தில் புகுந்து டெண்டர் விண்ணப்பத்தினை போட முற்பட்டுள்ளனர். அப்போது அவர்களை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்த திமுகவினர் தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தடுத்த கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினரை தாக்கி சட்டையை கிழித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகமே போர்க்களம் போல் காட்சி அளித்ததோடு, பெரும் பரபரப்போடு காணப்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், கனிமவள அலுவலகத்திற்கு உடனடியாக வந்து டெண்டர் போட வந்தவர்களை தவிர அனைவரும் வெளியேறுங்கள் என்று எச்சரித்துள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளாத திமுகவினர் உள்ளிட்ட ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த அடாவடி சம்பவத்தை வீடியோ பதிவாக எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் போலீசாரை தாக்கிய கும்பல், அவர்களிடமிருந்து செல்போன்களையும் பறித்து உடைத்தெறிந்ததாகவும் கூறுகின்றனர். இதனையறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் உதவியுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திமுகவினர் உள்ளிட்ட அனைவரையும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது. இதனிடையே நடைபெற இருந்த 31 கல்குவாரிக்கான ஏலத்தினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் ரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது நேற்று ரத்து செய்யப்பட்ட ஏலம் இன்று நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சை திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.