ETV Bharat / state

மூடுவிழா காணும் கறிக்கோழிப் பண்ணைகள்... கடன் தொல்லையால் அவதியுறும் பண்ணையாளர்கள்!

author img

By

Published : Jul 15, 2020, 7:45 PM IST

கோழி வளர்ப்பில் சம்பாதித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம் என நினைத்த விவசாயிகளில் சிலர் கோழி வளர்ப்புத் திட்டத்தின் பக்கம் சாய்ந்தனர். ஆனால், அவர்கள் இதுவரை தங்கள் கடனை அடைக்கவில்லை. ”லாபம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, கடன்தொகையாவது குறைய வேண்டும். அதற்கும் வழியில்லாமல், நிம்மதியின்றி உழல்கிறோம்” என வேதனைத் தெரிவிக்கும் கறிக்கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு அரசுதான் ஒரே ஆதரவு...

chicken
chicken

கோழிப் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு கோழி வளர்ப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2013-2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க ஏற்படும் செலவில் 25 விழுக்காடு அரசு மானியமாக வழங்குகிறது. தவிர, நபார்டு வங்கியின் மூலம், 25 விழுக்காடு மானியம் என மொத்தம் 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50 விழுக்காடு தொகையைத் தங்கள் சொந்த செலவிலோ அல்லது வங்கியில் கடனாகவோ பெற்று பண்ணை அமைக்கலாம் என்றும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கோழிப் பணைகள் அமைக்க சில விவசாயிகள் முன்வந்தனர். விவசாயத்திலிருந்து பண்ணைத் தொழிலில் ஈடுபட்ட அவர்கள் என்ன ஆனார்கள், அவர்களின் தொழில் எப்படி இருக்கிறது, போன்ற பல கேள்விகளுக்கு விடைகாண அவர்களைத் தேடிச் சென்றோம். “ஏற்கனவே பல நெருக்கடியில் இருக்கிறோம். இதன் நடுவே சிக்கன் குனியா, கரோனா என வைரஸ் மூலமாக ஏற்படும் நோய்களும் எங்கள் தொழிலைத்தான் முதலில் குறிவைக்கின்றன” என தோய்ந்த குரலில் பேசி நம்மை மௌனிக்க வைக்கின்றனர், கறிக்கோழிப் பண்ணையாளர்கள்.

பெரம்பலூர் மாவட்டம் மழையை நம்பி விவசாயம் செய்யக்கூடிய மாவட்டங்களில் ஒன்று. பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள், பூக்கள் உள்ளிட்டவை பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் முன்னிலைவகிக்கின்றன. இந்த விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் போதிய நீர் இல்லாமல் வெள்ளாமையைக் கைவிட்டவர்கள். இவர்களுக்கு அரசின் கறிக்கோழிப் பண்ணை அமைக்கும் திட்டம் கவன ஈர்ப்பை ஏற்பத்தவே, மானியம் வாங்கி தொழில் செய்யலாம் என களத்தில் இறங்கினர்.

”நான் ஏழு வருடத்திற்கு முன்பு கறிக்கோழிப் பண்ணை அமைத்தேன். தமிழ்நாடு அரசின் திட்டத்தின்மீது ஏற்பட்ட ஆர்வம் என்னை மட்டுமல்ல பெரம்பலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரை கறிக்கோழிப் பண்ணைத் தொழிலில் ஈடுபட வைத்தது கோழி வளர்ப்புத் திட்டம். ஆனால் தற்போது 100 முதல் 150 பண்ணைகள்தான் செயல்பாட்டில் உள்ளன.

எதிர்பார்த்த மானியம் இல்லை, தலைக்கு மேல் ஏறிய கடன், வங்கிகளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணரும் நிலை என எங்கள் வாழ்க்கை திக்குமுக்காடி போனது. இத்தொழிலிலில் குறைந்தபட்ச வருமானமாவது கிடைக்கும் என நம்பி இறங்கினோம். ஆனால், முதலுக்கே மோசமாகிவிட்டது. பண்ணை அமைத்துவிட்டோம், அதில் ஏதேனும் வேலை செய்யலாம் என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்து இருக்கிறோமே தவிர, வருமானம் எல்லாம் இல்லை” என்கிறார் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர், கணேசன்.

மூடுவிழா காணும் கறிக்கோழிப் பண்ணைகள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டை பாடி, மேட்டுப்பாளையம், அரும்பாவூர், ஆலம்பாடி, செங்குணம், கீழப்புலியூர், புதுவெட்டக்குடி, சத்திரமனை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. ஆனால் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் உழன்றுவருகின்றன.

இதுகுறித்து கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் செல்வராஜ் கூறுகையில், “அரசிடமிருந்து பெற்ற மானியத் தொகை வங்கியில் வாங்கிய கடன் தொகையில் பாதியைக்கூட கட்ட உதவவில்லை. பண்ணையில் கிடைத்த மொத்த வருவாயையும் கட்டிய பின்னும் கடன் நிலுவை முடிந்தபாடில்லை. இதற்கிடையில் எங்கிருந்தோ வந்துவிடுகிறது வைரஸ் காய்ச்சல். சிக்கன் குனியா பரவியபோதும் கறிக்கோழி விற்பனை அதலபாதாளத்திற்குச் சென்றது. தற்போது கரோனாவிலும் அதே நிலைதான்.

சென்னை, பெங்களூரு, கேரளா போன்ற பெருநகரங்களில் கறிக்கோழி கொள்முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், உற்பத்தி தேக்கம் ஏற்பட்டது. இதனால் கோழிகளை உள்ளூரில் விற்பனை செய்து வருமானம் பார்க்கச் சொல்லி நிறுவனங்கள் கூறிவிட்டன. உள்ளூரில் விற்றது வெறும் ரூ.8 முதல் ரூ.10 ஆயிரம்தான் வருமானத்தைக் கொடுத்தது. சில நேரங்களில் ரூ.500 தான் எங்கள் கைகளுக்கு எட்டியது. சில கோழிகள் விற்பனைக்குச் செல்லாமலேயே இறந்துவிட்டன.

வருடத்திற்கு 5 முறை கோழிக் குஞ்சுகள் இறக்கிவந்த விற்பனை நிறுவனங்கள் தற்போது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே இறங்கிவருகின்றனர். இதனிடையே பெரும்பாலான பண்ணைகளுக்கு கோழிக்குஞ்சுகளை இறக்காத காரணத்தினால் சுமார் 100க்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் கோழிக்குஞ்சுகள் இல்லாத காரணத்தினால் முடங்கிக் கிடக்கின்றன” என்றார்.

கோழிப் பண்ணையில் செயல்படும் இடைத்தரகர்களுக்குக் கிடைக்கும் கமிஷனை விட கோழிப் பண்ணையை நடத்துபவர்களுக்கு வருமானம் குறைவு. கோழிப் பண்ணையில் கூலி, மின்சாரம், கோழி தீவனம் என பரமாரிப்பு செலவே குறைந்தது ரூ.35 ஆயிரம் ஆகுகிறது. ஒரு வருடத்திற்கு வங்கி கடன் தவணைத் தொகை 1 லட்சத்து 60 ஆயிரம் கட்ட வேண்டிருயிருக்கிறது. ஆனால், தங்கள் வருமானம் ரூ.70 ஆயிரத்தைக்கூட எட்டுவதில்லை என வேதனைத் தெரிவிக்கிறார், கோழிப்பண்ணை உரிமையாளர் மகேந்திரன்.

வீடு மற்றும் நிலங்களை விற்று கடனைக் கட்டி கறிக்கோழிப் பண்ணை நடத்தும் அவலம் பெரம்பலூரில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. லாபம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, கடன் தொகையாவது குறைய வேண்டும். அதற்கும் வழியில்லாமல், நிம்மதியின்றி உழல்கிறோம் என வேதனைத் தெரிவிக்கும் இவர்களுக்கு அரசுதான் ஒரே ஆதரவு. கோழி வளர்ப்பில் சம்பாதித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம் என நினைத்த எந்த விவசாயியுமே தங்கள் கடனை அடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இதையும் படிங்க: பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 102 ரூபாயாக நிர்ணயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.