ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை 43 நாள்களுக்குப் பின்னர், இன்று முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் காலை முதலே மதுப்பிரியர்கள் மதுபான கடைகளில் கூட்டம் கூட்டமாகக் குவியத் தொடங்கினர். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறுத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்ற தன்னார்வலர் காந்தி வேடமிட்டு, நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள பிரச்சார மேடையில் அமர்ந்து மதுபான கடைகளுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டார்.
![ரமேஷைவிசாரணைக்காக அழைத்துச் செல்லும் காவல்துறையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-01-gandhi-protest-against-wineshops-script-vis-7205944_07052020135707_0705f_01291_619.jpg)
தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த காவல்துறையினர் அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதாகக் கூறி, ரமேஷை காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தன்னார்வலர் ரமேஷ் கூறுகையில், "ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் பல்வேறு தொழில்கள் நசிந்துவிட்டன.
இதனால் பொது மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்குப் போதிய பணமின்றி தவித்துவரும் இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளித்தது வேதனையான ஒன்றாகும்.
மது அருந்த வேண்டுமென்று ஆண்கள் தங்களது குடும்பத்தாரை துன்புறுத்தும் நிலை உருவாகும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் மாநில அரசு மதுக்கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையும் பார்க்க: முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா!