நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில், பொங்கல் பண்டிகை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தவிர்க்கப்பட்டுவருகிறது. இந்தக் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் நபர்கள் வாழ்ந்துவருகின்றனர்.
இவர்கள் முன்பு, கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த நாய் ஒன்று, பொங்கலைச் சாப்பிட்டதாகவும் இதனால் அபசகுணம் என்ற கருதிய மக்கள் அந்தாண்டு பொங்கல் கொண்டாடுவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அடுத்த ஆண்டு, மாட்டுப்பொங்கலை கொண்டாடும்போது, கால்நடைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள், பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர்.
ஆனால், இந்தத் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான இளங்கோ, மக்களிடம் நிலவும் அவநம்பிக்கையைப் போக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை கடந்த 18 ஆண்டுகளாகக் கொண்டாடிவருகிறார். அதே போல், இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை வழக்கம்போல இளங்கோ மட்டும் கொண்டாடினார். அதில், அவரது உறவினர்கள் ஒரு சிலரைத் தவிர யாரும் கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து இளங்கோ கூறுகையில், "பொங்கல் பண்டிகை கொண்டாட மக்களை வலியுறுத்திவருகிறேன். கடந்த 18 ஆண்டுகளாக நான் கொண்டாடிய பொங்கல் பண்டிகையில் கிராம மக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் மக்களிடம் விழிப்புணர்வு வரும் வரை நான் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவேன்" என்றார்.
இதையும் படிங்க: நீலகிரியில் கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம்