நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இதில் 50 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி, நாமக்கல் மாவட்டத்திலும் ஊரடங்கில் சிறிது தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வர்த்தகர்கள், வணிக நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், ஆட்சியர் மெகராஜ் செய்தியாளரிடம் பேசுகையில், "நாமக்கல் மாவட்டத்தில் சலூன், ஸ்பா, அழகு நிலையங்கள், டீ கடைகள், ஜவுளி கடைகள், குளிரூட்டப்பட்ட வளாகங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதியில்லை.
அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையும், ஹார்டுவேர், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், ஸ்டுடியோக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும் செயல்பட வேண்டும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இறைச்சிக் கடைகள் வழக்கம் போல் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலப் பகுதிகளுக்கு இந்தத் தளர்வுகள் பொருந்தாது.
தூத்துக்குடியில் இருந்து பொருட்களைப் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல எவ்வித தடையும் இல்லை. இங்கு தங்கியுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: 'பெட்ரோல் டீசல் மதிப்பு கூட்டு வரியை திரும்ப பெறுக - ஸ்டாலின்'