ETV Bharat / state

சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு... உணவகத்திற்கு சீல்... அதிகாரிகள் தீவிர விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 4:28 PM IST

சவர்மா சாப்பிட்டு சிறுமி பலி
சவர்மா சாப்பிட்டு சிறுமி பலி

நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் உணவருந்தியதில் 19 பேருக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சவர்மா சாப்பிட்டு சிறுமி பலி

நாமக்கல்: தனியார் உணவகத்தில் உணவருந்திய சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 19 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் பரமத்தி சாலையில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை (செப்.16) அன்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள் 13 பேர் இந்த உணவகத்திற்கு உணவருந்த சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சவர்மா மற்றும் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு இரவு கல்லூரி விடுதிக்கு திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உணவருந்திய 13 மாணவ மாணவிகளுக்கும் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் பாதிப்பு உபாதைகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

உடனடியாக விடுதி காப்பாளர் மாணவ மாணவிகளை நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். சிகிச்சையில் இரவு உணவகத்தில் உட்கொண்ட உணவால் மாணவ மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்த கவிதா, தனது மகள் கலையரசி, மகன் பூபதி, தாய் சுஜிதாவுடன் அதே கடையில் சவர்மா மற்றும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கும் வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற அதே அறிகுறிகளோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின் அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி கலையரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமியின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சூழலில், நாமக்கல்லில் இயங்கி வரும் அந்த தனியார் உணவகத்தில் உணவருந்திய 19 பேர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்ற ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் சவர்மா தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் இயந்திரம் சுகாதாரமற்று அசுத்தமான நிலையில் இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்தில் இருந்த கோழி இறைச்சியை ஆய்விற்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உணவகம் சீல் வைக்கப்பட்டது. மேலும் உணவகத்தின் உரிமையாளர் நவீன்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நாமக்கல் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பேரிஜம் ஏரியில் 8 நாட்களாக காட்டு யானைகள் முகாம்.. வனத்துறை மெத்தனம் என சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.