ETV Bharat / state

ஆர்டிஐ தகவல்கள் கேட்டவர்கள் மீது தாக்குதல் - காவல் நிலையத்தில் புகார் மனு!

author img

By

Published : Sep 20, 2020, 2:35 AM IST

நாகப்பட்டினம்: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஊழல் குறித்த விவரம் கேட்டவர்களை மயிலாடுதுறை ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து அடித்து உதைத்தாக காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் புகார் மனு
காவல் நிலையத்தில் புகார் மனு

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் பசுமை வீடு, ஐஏஒய்., பிஎம்ஏஒய்., திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை அறிந்த சேத்தூரையைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர் சதீஷ் என்பவர் தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சேத்தூர் ஊராட்சியில் 2014 முதல் 2018வரை வீடுகட்டப்பட்டதற்கான பயனாளிகள் விவரத்துடன் அனைத்து தகவல்களையும் பட்டியல் போட்டு கேட்டிருந்தார்.

ஒரே திட்டத்தில் மட்டும் பலன் பெற்ற பயனாளிகள் பெயரை மட்டும் தெரிவித்துவிட்டு மற்ற எந்த விவரத்தையும் அளிக்க மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து சட்ட விளக்கங்களை அளித்து மேல் முறையீடு செய்ததில், செப்டம்பர் 18ஆம் தேதி நேரில் வரவும், ஆவணங்களை புகைப்படம் எடுக்கக்கூடாது, நகல் எடுக்கக்கூடாது, தங்களுடன் ஒருவர் மட்டுமே வரவேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தனர். இதுகுறித்து விளக்கமளித்தால் நிபந்தனை தளர்த்தப்பட்டு நகல் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கட்டவேண்டும் என்று அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சதீஷ் தனக்கு உதவியாக ஹரிகிருஷ்ணன் என்பவருடன் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றார்.

தாக்கப்பட்டது குறித்து சதிஷ் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்

அங்கே தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக உங்கள் பதில் உள்ளது. அனைத்து ஆவணங்களையும் பார்க்கவோ, நகல் எடுக்கவோ அனுமதிக்கவில்லை, எனவே நான் தகவல் பெறும் ஆணையத்தில் இதுகுறித்து கூறுகிறேன் என்று அலுவலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நேரத்தில் சேத்தூர் ஊராட்சிமன்ற தலைவரின் கணவரான குமார், ஊராட்சி எழுத்தர் மேலும் பல பேர் சேர்ந்து அலுவலகத்தின் உள்ளே புகுந்து அடித்து உதைத்து வெளியே விரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட சதீஷ், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இதுகுறித்து சதீஷ் கூறுகையில், " மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் திட்டமிட்டு சம்பந்தப்பட்ட ஊராட்சியிலிருந்து நபர்களை வரவழைத்து எங்களை அடித்து உதைத்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், எங்களை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்" என இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க: எண்ணூரில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் - ஏழு பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.