ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் செளத்ரி (50). இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் தருமகுளத்தில் நகை அடகுக் கடை, மயிலாடுதுறை முழுவதும் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை 6 மணி அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் தன்ராஜ் வீட்டின் கதவை தட்டி ஹிந்தியில் பேசியுள்ளனர். தன்ராஜ் கதவை திறந்தவுடன் அவரை தள்ளிவிட்டு மூவரும் உள்ளே சென்றுள்ளனர்.
கொலை செய்து விட்டு நகைக் கொள்ளை
இதைக் கண்ட தன்ராஜ் மனைவி ஆஷா (45), மகன் அகில் (24) ஆகிய இருவரும் கூச்சலிடவே அடையாளம் தெரியாத நபர்கள் அவர்கள் இருவரையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். பின்னர் படுக்கை அறையில் இருந்த 17 கிலோ தங்க நகைகளை திருடிக் கொண்டு வெளியே வந்தபோது தன்ராஜ், அவரது மருமகள் நெக்கல் இருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியின் ஹார்ட்வேரை எடுத்துக்கொண்டு தன்ராஜ் காரை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, படுகாயமடைந்த இருவரரையும் அக்கம்பத்தினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா விசாரணை மேற்கொண்டு வந்தார்.
எஸ்.பி விசாரணை
இந்நிலையில், தப்பிக்க பயன்படுத்திய கார் சீர்காழி அருகே ஒலையாம்புத்தூர் சாலையில் நின்று கொண்டிருப்பாதாக காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு சென்ற அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏதாவது தடயம் கிடைக்கிறதா என விசாரணை நடத்தி வந்தார்.
இதனிடையே, எருக்கூர் மேலத்தெருவில் சந்தேகப்படும்படியாக வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் வயலில் அமர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், அங்கு சென்ற காவல் துறையினர் அவர்கள் மூவரையும் பிடிக்க முயற்சி செய்தபோது, கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி காவலர்களை மிரட்டியுள்ளனர்.
என்கவுன்ட்டர்
அப்போது, காவல் கண்காணிப்பாளரின் கார் ஓட்டுநர் சுரேஷ் அவர்களை பிடித்தார். பின்னர் காவலர்கள் அவர்கள் மூவரையும் வயல்வெளிக்கு அழைத்துச் சென்று வயலில் கிடந்த நகை பையை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், வயலில் பதுக்கி வைத்திருக்கும் ஒரு நகை பையை எடுக்க மணிபால்சிங் என்ற கொலையாளியை அழைத்துச் சென்றபோது அவர் காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடும்போது கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் என்கவுண்டர் செய்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்த கொலையாளி மணிபால் சிங்கின் உடல் உடற்கூராய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 17 கிலோ தங்க நகைகள், சிசிடிவி ஹார்டு டிஸ்க், 2துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரமேஷ், மணிஸ் ஆகிய இருவரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சீர்காழி நகை கொள்ளை: என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை