ETV Bharat / state

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் கடத்தி விற்பனை... 56 பேர் அதிரடியாக கைது!

author img

By

Published : May 16, 2023, 12:29 PM IST

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக கள்ளச்சாராயம், மதுபானங்கள் கடத்தி விற்பனை செய்து வந்த 56 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மயிலாடுதுறை: விழுப்புரம் மாவட்டம், எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச் சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் சாராயம் விற்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா உத்தரவின் பேரில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள 14 காவல்நிலைய சரகங்களில் கள்ளச்சாராயம், மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக மதுபானம் கடத்தி விற்பனையில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாக தேடி வந்து உள்ளனர். இதில் 56 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மயிலாடுதுறை, பொறையார், சீர்காழி கிளைச் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டில், தற்போது வரை தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 10 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பின் கைது செய்யப்பட்டவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதுச்சேரி மாநிலத்தின், காரைக்கால் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகில் இருப்பதால் இங்கு மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய பாட்டில்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாலும் சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸார்கள் வாகன சோதனையைத் தீவிர படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் அனுமதியின்றி கள் இறக்கியதாக 83 வழக்குகள் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.