ETV Bharat / state

மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் சாய்ந்து சேதம்;விவசாயிகள் வேதனை!

author img

By

Published : Aug 10, 2023, 3:15 PM IST

agri damage
கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் சாய்ந்து சேதம்

மயிலாடுதுறையில் நேற்று (ஆகஸ்ட் 9) இரவு பெய்த கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளதாகவும், இதை தமிழ்நாடு அரசு உரிய கணக்கீடு செய்து தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் சாய்ந்து சேதம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், நடப்பாண்டு 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளில், பம்புசெட் நீரைக் கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி, மாவட்டம் முழுவதும், முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது பல இடங்களில் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்த நிலையில், நேற்று நள்ளிரவு, மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இன்று காலை 6 மணி வரை, மயிலாடுதுறையில் 65.6 மி.மீட்டர், மணல்மேட்டில் 37 மி.மீட்டர், சீர்காழியில் 39.2 மி.மீட்டர், கொள்ளிடம் 49 மி.மீட்டர், செம்பனார்கோயில் 26.8 மி.மீட்டர், தரங்கம்பாடி 12 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகப்படியாக மயிலாடுதுறையில் 65.6 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக தரங்கம்பாடியில் 12 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்த மழையின் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் மங்கைநல்லூர், மணல்மேடு, திருஇந்தளூர், நல்லத்துக்குடி, செருதியூர், மணக்குடி, சேமங்கலம், பெரம்பூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மழை நீரில் மிதக்கிறது.

பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து கிடப்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும், ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள சூழலில், அறுவடை நேரத்தில் 10 ஆயிரம் ஏக்கர் விளைச்சல் நீரில் கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும், இந்த மழை மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், பயிர்கள் நீரில் மூழ்கி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர். தற்போது தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்து வருவதால், விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கூறுகையில், “பல்வேறு கடன் பட்டு, பல இன்னல்களுக்கு மத்தியில், இந்த விவசாயத்தை செய்து வருகிறோம். ஆனால் பெருமளவு சம்பா சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யும் காலத்தில், பெரும்பாலும் மழை வெள்ளப் பாதிப்புகளில் சிக்கி தாங்கள் செய்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி, பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவது தொடர்கதையாக உள்ள சூழலில், தற்போது காவிரி நீரை எதிர்பாராமல் நிலத்தடி நீரைக் கொண்டு, முன்பட்ட குறுவை சாகுபடி செய்து ஏதோ சிறு அளவில் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ளலாம் என்று எண்ணிய நிலையில், தற்போது பெய்யும் மழையால் அதுவும் தங்களுக்கு பெரும் இடியாக விழுந்து உள்ளது'' என்றனர்.

மேலும், இதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு உரிய கணக்கீடு செய்து தங்களுக்கு இழப்பீடு வழங்கி விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையும் படிங்க:"ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.