ETV Bharat / state

அரசு பள்ளியில் அவலம்... சத்துணவு கூடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து...! நூலிழையில் உயிர் தப்பிய சமையலர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 7:43 AM IST

sirkazhi-municipal-primary-school-kitchen-building-roof-collapse-accident
சீர்காழி அருகே அரசு பள்ளியில் அவலம்... சத்துணவு கூடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து...!

சீர்காழி அருகே துறையூர் நகராட்சி தொடக்கப் பள்ளி சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் சமையலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சீர்காழி அருகே அரசு பள்ளியில் அவலம்... சத்துணவு கூடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து...!

மயிலாடுதுறை: சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவிற்காக சமையலர் கலா என்பவர் உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டார்.

அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார். அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதமடைந்தன.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் அருகில் இருந்த பள்ளியின் சமையல் கூடத்தில் இருந்து இப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து கொடுக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் பள்ளி இயங்கி வருகிறது.

ஆனால் இப்பள்ளிக்கான சமையலரை கூடம் பழைய கட்டிடத்திலேயே செயல்படுகிறது. பல ஆண்டுகளாக சிதிலமடைந்த கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இப்பள்ளியில் குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாவதாக கூறப்படுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டோர் சமையல் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கூடியிருந்த பெற்றோர்கள் அதிகாரிகளிடையே பலமுறை நகராட்சியில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் உயிர் சேதம் ஏற்ப்பட்டிருந்தால் என்ன செய்வது, பள்ளியை இழுத்து மூடுங்கள் பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்பிவிட்டு பயத்துடன் காத்திருப்பதாக ஆவேசத்துடன் கேட்டனர்.

துறையூர் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சமையலறை, பள்ளிக் கட்டிடம் 33 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சேலம் பாஜக மகளிர் அணி பிரமுகர் கொலை வழக்கு - ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.