மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: பொதுமக்கள் சாலை மறியல்!

author img

By

Published : Aug 25, 2021, 9:43 PM IST

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான காணொலி

சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவரை காப்பாற்றச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், இளைஞரின் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள குளங்கரை பகுதியில், இன்று (ஆக.25) காலை வீடு ஒன்றுக்குச் சென்ற மின் இணைப்பு கம்பியானது, அந்த வழியே சென்ற லாரியால் அறுபட்டு கீழே விழுந்துள்ளது.

அப்போது இதனை அறியாமல் அந்த வழியாக சைக்கிளில் சென்ற சிங்காரவேல் (80) அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியுள்ளார்.

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான காணொலி

உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

இதனைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அரவிந்தன் (25), முதியவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு, காவல் துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அரவிந்தனின் குடும்பத்தினர், கிராம மக்கள் ஆகியோர் சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், வட்டாச்சியர் சண்முகம், காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், மின்வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையால் சாலை மறியல் கைவிடல்

பேச்சுவார்த்தையில் அரவிந்தன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்ய உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: குளிக்கும் போது பெண்ணை வீடியோ எடுத்த சட்ட மாணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.