ETV Bharat / state

காணாமல் போன விபத்தில் சிக்கிய பைக்.. திணறிய போலீசார்.. 3 பேர் கைதானதன் பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 1:55 PM IST

Police arrested three youths who stole the bike involved in an accident in Mayiladuthurai
விபத்தில் சிக்கிய பைக்கை திருடிய இளைஞர்கள் கைது

மயிலாடுதுறை அருகே பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு கார் நிற்காமல் சென்றது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்யும் முன், விபத்தில் சிக்கிய பைக் திருடப்பட்டதால் போலீசார் வழக்குப் பதிவு செய்ய முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில், விபத்தில் சிக்கிய பைக்கை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பைக்கை திருடிய இளைஞர்கள் கைது

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த திவாஸ், ரகுமான் என்ற 2 இளைஞர்கள், தீபாவளியன்று பூம்புகார் கடற்கரைக்குச் சென்றுவிட்டு ஸ்ப்ளன்டர் பிளஸ் பைக்கில் வீடு திரும்பியபோது, கருவி முக்கூட்டு என்ற பகுதியில் அடையாளம் தெரியாத கார் மோதி விபத்திக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, திவாஸ் மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையிலும், ரகுமான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட செம்பனார்கோவில் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரினை சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தேடினர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் சம்பவ இடத்துக்குச் சென்று, விபத்து ஏற்பட்ட இடத்தில் சேதமடைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பிளன்டர் பைக்கை எடுக்கச் சென்றபோது, பைக் காணாமல் போயிருந்ததைக் கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கனவே விபத்தை ஏற்படுத்திய காரைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ள நிலையில், விபத்தில் சிக்கிய பைக்கும் காணாமல் போனதால், பைக் இல்லாமல் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்ய முடியாமல் போலீசார் தவித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, மீண்டும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, விபத்தில் சேதமடைந்த பைக்கினை அன்று மாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், விபத்தில் சிக்கிய வாகனத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

அதில் விபத்தில் சிக்கி சேதமடைந்த ஸ்பிளண்டர் பைக்கில் ஒரு இளைஞர் அமர்ந்து கொள்ள, மற்ற இரண்டு இளைஞர்கள் பல்சர் பைக்கில் அமர்ந்து ஓட்டியவாறு, சேதமடைந்த பைக்கை காலால் தள்ளிச் சென்றுள்ளனர். மேலும், மூன்று இளைஞர்களும் விபத்தில் சிக்கிய பைக்கை மயிலாடுதுறைக்கு எடுத்துச் சென்றது, அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.

இந்த சிசிடிவி பதிவுகளை வைத்துக் கொண்டு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை செம்பனார்கோவில் போலீசார் தேடி வந்த நிலையில், பைக்கை திருடிச் சென்றது மயிலாடுதுறை அருவாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்பதையும், அவருக்கு துணையாக பைக்கை எடுத்துச் செல்ல உதவியாக இருந்தது மயிலாடுதுறை கூறைநாட்டைச் சேர்ந்த நவீன்குமார் (25), சோழசக்கரநல்லூர் உளுத்துக்குப்பை பகுதியைச் சேர்ந்த அசோக் (26) என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, திருட்டுக்குப் பயன்படுத்திய பல்சர் பைக்கை பறிமுதல் செய்ததோடு, அந்த 3 இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற செம்பனார்கோவில் போலீசார், திருட்டு வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொறையாறு கிளைச் சிறையில் அடைத்தனர்.

காணாமல் போன பைக் மீண்டும் கிடைத்ததைத் தொடர்ந்து, ஒருவழியாக விபத்து குறித்து 15 நாட்களுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்துள்ள செம்பனார்கோவில் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்ற காரை மீண்டும் தேடத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பியோட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.