மயிலாடுதுறை: மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசியர் த.ஜெயராமன் இன்று (மார்ச் 13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது, "ஒஎன்ஜிசி நிறுவனம் 2015, ஜனவரி 30இல், அனுமதி வழங்கப்பட்ட 30 ஹைட்ரோகார்பன் கிணறுகளில் 21 கிணறுகளை அமைத்துவிட்டதாகவும், 9 கிணறுகளை அமைக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது.
இந்நிலையில், தற்போது ஒஎன்ஜிசி நிறுவனத்துக்கு காவிரிப்படுகையில் 9 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க 2025 வரை கால அனுமதி நீட்டிப்பு வழங்க, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலச்சட்டம்-2020 இயற்றிய பிறகு, காவிரிப்படுகையில் புதிய எண்ணெய்-எரிவாயுக்கிணறு அமைப்பது சட்ட விரோதமானது.
கிணறுகள் சட்டவிரோதமானது
2015-க்குப் பிறகு எந்த ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கவும் அனுமதி அளிக்கவில்லை என்று அதிமுக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது பதவியேற்றுள்ள திமுக அரசும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. முந்தைய அரசும், தற்போதைய அரசும் அனுமதிக்காத நிலையில், 21 கிணறுகளை ஒஎன்ஜிசி எப்படி அமைத்தது?.
அப்படியென்றால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இந்தக் கிணறுகளை ஒஎன்ஜிசி அமைத்துள்ளது. மேலும், ஒஎன்ஜிசி நிறுவனம் பல இடங்களில் பழைய எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள வளாகங்களில் மராமத்துப்பணி என்ற பெயரில் புதிய கிணறுகளை அமைக்க முயற்சிக்கிறது. உடனடியாக இதுகுறித்து விசாரித்து, ஒஎன்ஜிசி நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: காவிரி டெல்டாவில் மீண்டும் வரும் ஹைட்ரோகார்பன் அபாயம் - முதலமைச்சர் தடுக்க கோரிக்கை!